states

சமூக அமைதியைப் பாதுகாக்க ஓரணியில் நிற்போம்: ஜவாஹிருல்லா

சென்னை, அக்.25- தமிழ்நாட்டில் சமூக அமைதியைப் பாதுகாக்க ஓரணியில் நிற்போம் என்று மனித நேய மக்கள்  கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்திருக் ்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காவல் சோதனை சாவடி முன்பு ஒரு  மாருதி ஆம்னி வாகனத்தில் கேஸ் உருளை வெடித்துச் சிதறி, வாகனம் இரண்டு துண்டாகியுள்ளது. காரை ஓட்டிச் சென்றவர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்துள்ளார். அவரது பெயர் ஜமேசா முபீன் என அறியப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குகள் ஏதும் இல்லை. எனினும் அவர் வீட்டில் வெடிபொருட்கள் இருந்ததாகவும், முன்பு அவரை என்ஐஏ விசாரித்திருப்பதாகவும் காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு சம்பவ இடத்தில் நடந்த ஆய்வுக்குப் பிறகு தெரிவித்துள்ளார். இது மிகுந்த வேதனைக்குரிய சம்பவமாகும்.

இச்சம்பவம் தற்செயலான விபத்தாகவே இருக்க வேண்டும் என விழைகிறோம். அதேநேரம், இதன்  பின்னணியில் ஏதேனும் பயங்கரவாத விஷமச் செயல்கள் இருக்குமாயின் அது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இதன் பின்னணியில் இருப்போர் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு ஓர் உயர்ந்த உதாரணமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. பல்வேறு மதங்களைப் பின்பற்றுவோர் இங்கே ஒருதாய் பிள்ளைகளாய் தொப்புள்கொடி உறவு களாய் பிணைந்து இணைந்து வாழ்ந்து வருகிறோம்.  இந்நிலையைச் சீர்குலைக்கும் எந்த சூழ்ச்சிக்கும் இங்கு இடங்கொடுத்து விடக்கூடாது. பயங்கர வாதம் எந்த மூலையிலிருந்து, எந்த முகாமிலி ருந்து முளை விட்டாலும் அதை ஆரம்ப நிலையி லேயே அடியோடு கிள்ளி எறிந்திட வேண்டும். தமிழகத்தின் அமைதிக்கும் நல்லாட்சிக்கும் ஊறுவிளைவிக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்  என வலியுறுத்துகிறேன். பொதுமக்கள் வதந்திக ளுக்கோ விஷமிகளின் தூண்டலுக்கோ இடங்கொடுத்து விடாமல், சமூக அமைதியையும், நல்லிணக்கத்தையும் பாதுகாத்திட ஓரணியில் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்றும் அன்போடு வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.