விடியற்காலை பொழுது சேர்மக்கனி படுக்கையிலிருந்து எழுந்தாள்.அவளது படுக்கை என்பது நீங்கள் நினைக்கிற மாதிரி டபுள்காட் கட்டிலோ மெத்தையோ அல்லது கைக்கு காலுக்கு தலைக்கு என்று தனித் தனியே தலையணைகள் கிடையாது. வீட்டின் தரை பழைய பாவூர்சத்திரம் தளச் செங்கலினால் ஆனது. அந்த தரையும் சாணம் போட்டு மொழுகப்பட்டிருக்கும்.அதான் அவளது படுக்கை. தலைக்கு பழைய சேலையை சுருட்டிவைத்து கொள்வாள். எழுந்தவுடன் அந்தச் சேலையை எடுத்து கொடியில் போட்டு விடுவாள். அடுத்து அவளது வீட்டின் மூலையில் இருக்கும் பீடித்தட்டினைப் பார்த்தாள். பீடி சொளவில், பீடி இலைகளும் புகை யிலை தூளும் அப்படியேயிருந்தன. சுற்றி வைத்த பீடிகளை எண்ணிப் பார்த்தாள். மூன்று பீடிகள் குறைந்திருந்தன.
“அடபாவி மனுஷா! மூணு பீடிய எடுத்து குடிச்சிட்டிய” என்று தன் புருஷனைத் திட்டிக் கொண்டே அவனை எழுப்பினாள். அவளோட புருஷன் தொரச்சாமியும் எழுந்து உட்கார்ந்து ரெண்டு கைகளையும் மேலே தூக்கி சோம்பல் முறித்தவாறு, ஆவ் என்று கொட்டாவி விட்டான். “யோவ், ஒம்ம ஒரு பீடி தான எடுக்கச் சொன்னால் மூணு பீடிய எடுத்துக் குடிச்சிருக்கிற. நான் போயி அந்த கொல்லைல போற காண்டுரா கிட்டர்ட ஏச்சு வாங்கனும்.” என்று ஏசிக்கிட்டே அவனோட பொடதில ரெண்டு தட்டு தட்டினாள் சேர்மக்கனி. “ராத்திரி ரொம்ப குளிராயிருந்துசுனு கூட ரெண்டு பீடிய எடுத்து குடிச்சேன்அதுக்கு போயி ஏன் தலையில அடிக்கிற” என்று கத்தினான். “அதுக்காக வண்டல்லயிருந்து சுத்தின பீடிய ஏன் உருவுன.இத பாக்காம நான் பீடி கடைக்கு கொண்டு போயிருந்தேனு வச்சுக்க பீடிபாக்குற சூப்புரைசவரு, அதான் அந்த காகா கரியன், கட்டைல போறவன் வண்டல முறிச்சு போட்டுருவான், தெரியும்ல. உனக்கு பீடி வேணும்னா உங்க அக்கா வீட்டுக்கு போயி வாங்கி குடி. யாரு வேண்டாம்னா “என்றாள்.
வராது. உன் பீடி மூணாறு கட்டபீடில புகை நிறைய வரும். இந்த குளிருக்கு நெஞ்சு நெறய புகை உள்ள யிருந்தா நல்லாயிருக்கும்.அதான் கூட ரெண்டு எடுத்தேன்” என்றான் தொரச்சாமி. “ சரி சரி இன்னமும் பண்ணி தொலையும்..நான் இன்னும் குறை பீடிய சுத்தி முடிக்கனும் .” என்று சொல்லிட்டு தார்சாவிலிருந்த கோழிக் கூண்டைத் திறந்து விட்டாள். அடைபட்டுக் கிடந்த சேவலும் கோழி களும் வெளியே ஓடின.அவள் வெளியே வந்து எட்டிப் பார்த்தாள். எதிரேயிருந்த பஸ்ஸ்டாப்பில், ஒரு ஆணும் பெண்ணும் நிற்பது, இருட்டாகயிருந்த தால் யாரென்று தெரியாததால், “யாரு அங்கன நின்னுகிட்டிருக்குது” எனக் கேட்டாள். “ நாந்தாக்கா சுந்தரி.இது ஒங்க கொழுந்தன்தான்” “ஆமா காலங்காத்தால ரெண்டு பேரும் எங்கிட்டு கெளம்பிட்டீக, மூணு நாளைக்கு விருந்துதானா?” எனக் கேட்டாள் சேர்மக்கனி. அதற்கு சுந்தரியோ, “இல்லக்கா நம்ப பத்தர காளிம்மன் கோயில் கொடை வருதுல்ல, அதான் ஆவுடையானூர்ல இருக்குற எங்க அண்ணனையும் மயினியையும் கோயில் கொடைக்கி கூப்புட போறோம்” என்றாள்
“என்ன திரும்பி வர இன்னும் ரெண்டு முனு நாளாகுமா” என்று கேட்ட சேர்மக்கனிக்கு, “ அதெல்லாம் இல்ல, மத்தியானம் கடையம் போயி மாட்டினி ஷோ நம்ம எம் சி யார் நடிச்ச உலகம் சுற்றும் வாலிபன் சினிமா பார்த்துட்டு நாள காலைல வெள்ளென வந்துர வேண்டியதுதான்” என்றாள் சுந்தரி. சரி பஸ் வர்ற நேரந்தான், வீட்ல எல்லாரையும் கேட்டதாக சொல்லு “ என்று சொல்லிட்டு வீட்டுக்குள் திரும்பினாள் .அங்க என்னடானா 20 மைல் தூரத்தில யிருக்குற அண்ணங்காரன கூப்பிட சோடியா போறாங்க. இங்க பக்கத்துலயிருக்குற மருதம்புத் தூருக்கு தொரக் குட்டியால போக முடியல. எல்லாத்தையும் கேட்டுட்டு தூங்குற மாதிரி நடிக்கிறத பாரு என்று முனங்கினாள் சேர்மக்கனி. “சரி எந்திரிச்சு மூஞ்சி முகரையக் கழுவிட்டு வா. கொஞ்சம் பீடி சுத்த வேண்டியிருக்கும்.” “இருடி .நா போயி தாத்தா கடைல டீ வாங்கிட்டு வர்றேன்”என்ற தொரச்சாமியை, சேர்மக்கனி” அதெல்லாம் வேண்டாம். நீங்க போனா டீ போடுற தாத்தாகிட்ட பழக்கம் விட்டுட்டு இருப்பீக .அதனால நம்ப சின்ன பையன டீ வாங்க சொல்லுவம்” என்றாள்.'
“ஏலே ராமசாமி.தூக்குச் சட்டியை எடுத்துட்டுப் போயி டீ வாங்கிட்டு வா” என்றாள். தொரை டீ வாங்க அந்த கடைக்கு போனா கொஞ்ச நேரமாக ஏதாவது ஊர் வம்பு பேசிட்டு ரெண்டு பீடி இழுத்துட்டு வந்துரலாம். இவ வேற போகாதன குறுக்குக் கட்டய வேறெ போட்டுட்டா. என்ன செய்ய” என்று முனங்கிக் கொண்டே எழுந்து போயி பீடி சுத்த உக்காந்தான். “அங்கனயென்ன பொலம்பல்” என்று கேட்டுக் கொண்டே ,சின்னப்பையன் ராமசாமி கொண்டு வந்த டீ யை எல்லோருக்கும் ஊற்றி கொடுத்தாள்.தொரைசாமி டம்ளரை எடுத்து வாயில் வைத்து டீ யை உறிஞ்சிக் குடிக்க ஆரம்பித்தான். “யோவ், மெதுவாக் குடி. உர்ஸ் உர்ஸ்னு உறிஞ்சி குடிக்கிற சத்தம் காத பொளக்குது” என்றாள் சேர்மக் கனி. அவனும் டீயைக் குடிச்சுட்டு டம்ளரை தரையில ஓங்கியடித்தான். “ஏ புள்ள என்னையா நக்கல் பணம்,இனி நீயே பீடி சுத்திக்கோ” என்று பதிலுக்குக் குத்திவிட்டு எழுந்திருக்கப் போனவனை,” தொரக் குட்டிக்கு என்ன பொசுக்குனு கோபம் வருது. இருந்து கொற பீடியையும் சுத்திக் கொடுத்துட்டு ஒம்ம பொழப்ப பாக்க போகலாம்” என்று சொல்லி அவன் கையைப் பிடித்து தரையில் உட்கார வைத்தாள்.இருவரும் சேர்ந்து பீடி சுத்த ஆரம்பித்தார்கள். ‘யம்மா’ என்று திடீரென குத்தினான் மகன் ராமசாமி.
“இப்ப என்ன எழவு எடுத்துச்சுன்னு இப்படி கத்துற”னு கேட்டாள் சேர்மக்கனி. “யம்மா எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு.இங்க வந்து சாப்பாடு எடுத்து வையி.” என்றான் ராமசாமி. “ஏலே இப்பந்தான 8 மணி பஸ்ஸே வந்துச்சு.அதுக்குள்ள ஸ்கூலுக்கு போகனும்னு அடம் பிடிக்கிற. அங்குட்டு போயி பசங்க கூட சேந்து வெளயாடனும். செத்த நேரம் எங்க கூட உக்காந்து பீடி சுத்தி பழகலாமுளா” என்றாள் சேர்மக்கனி. “இல்லம்மா!,இன்னைக்கு ஸ்கூலுக்கு புதுசா யாரோ வாராகலாம். அதான் இன்னைக்கு சீக்கிரமா வரச்சொல்லி டீச்சர் சொல்லுச்சு” இது ராமசாமி. “சரி சரி ! நீயாவது நல்லா படிச்சு ஒரு டாக்டரா வா. ஒங்கப்பன மாதிரி பழைய துரு புடிச்ச இரும்பு சாமானயும் பிளாஸ்டிக் பாட்டில்களயும் வாங்கி விக்கிற சோலியதான் பாக்கனும். சரி
அந்த பானைல உள்ள சோத்த எடுத்து போட்டு, கஞ்சியை ஊத்தி ஊறுகாய எடுத்துப் போட்டுச் சாப்பிட்டு போ.இன்னும் ரெண்டு வண்டல் பீடி தான் சுத்தனும்.” என்றாள் சேர்மக்கனி. “அவனச் சொல்லும்போது என்ன ஏன் வம்புக்கு இழுக்குற.” என்று கேட்டு துண்டுகளாகக் கெடந்த பீடி இலைகளைக் கூட்டி அவளோட தலயில போட்டான் தொரைச்சாமி. “இந்த மாதிரி கூறுகெட்ட வேல பாக்கதா லாயக்கு. சீக்கிரமா வியாபாரத்துக்கு போயிட்டு வா. மள நேரம். கருக்கல முடுச்சுட்டு வந்துரு.யாருகிட்டி யாவது ரொம்ப நேரமா நின்று பழக்கம் விட்டுகிட்டு யிருக்காத” என்று சொல்லிட்டு அவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்தாள்.அவனும் சாப்பிட்டு விட்டு அவனோட மொபட்டில் வியாபாரத்துக்கு கிளம்பிச் சென்றான். மாலைல வியாபாரத்த முடிச்சுட்டு வீட்டுக்கு திரும்பிய தொரைச்சாமி வீட்டில் தன் மகனத் தவிர வேற யாரும் இல்லாததப் பார்த்து, “எங்கடா உங்க ஆத்தாவும் அக்காவும்.” என்று மகனப் பாத்து கேட்டான். “தெரியாதுப்பா.நான் வரும்போது கதவு சும்மாதான் காத்திருந்தது.வீட்ல யாருமே இல்லப்பா“ என்று சொன்னான் ராமசாமி.
எங்க போயிருப்பாளுக இவுக ரெண்டு பேரும் என்று நினச்சுக்கிட்டிருக்கும் போதே அம்மாவும் மகளும் வீட்டுக்குள் வந்தனர் . அவர்களைப் பார்த்ததும் தொரைச்சாமி தன் மூஞ்சியை உம்மென்று வச்சுக்கிட்டு “ஆத்தாவும் மவளும் எங்கிட்டு போய்ட்டு வாரீக ,சும்மா சாலியாக” என்று கேட்டான் அவர்கள பாத்து. “இன்னைக்கு பீடி கடயில பெரிய பிரச்சினை. நான் பீடி வண்டல் பெட்டிய எடுத்துட்டு பீடி கடைக்கு போனேன். என்னோட முறை வந்ததும் அந்த காகா கரியன் நான் சுத்துன பீடிகளை வாங்கி பார்த்துட்டு சரியாயிருக்குனு சொல்லி என்கிட்ட கொடுத்து கட்டையில அடுக்கச் சொன்னார். பின்பு இன்னும் கொஞ்சம் வண்ணமாகச் சுத்தனுமென்றார்.நானும் சரியென்று தலை யாட்டி விட்டு, அந்த பீடிகளை கட்டையில அடுக்கி விட்டு, பீடியிலை தூள் வாங்க இலை நிறுத்து போடுற அந்த கட்டைல போறவன் கிட்ட பெட்டிய கொடுத்தேன்.அவன் நிறுத்துப் போட்ட இலையில் நெறைய கருப்புயிலை, அடுத்து நொறுங்கல்தான் அதிகமாக இருந்ததால், காண்டு ராக்டர் அண்ணாச்சியிடம் சொன்னேன்.அவரோ இஷ்டமிருந்தால் வாங்கிடு போ.இல்லைனா கணக்க முடுச்சுட்டு போனு சொன்னார். நான் இலையை யும் புகையிலையையும் அவரு மேசை மேலேயே கொட்டிட்டு வெளியே வந்தேன். அங்கு ரோட்டுல பீடி சங்கத்த சேர்ந்த முல்லை அக்கா போய்கிட்டு யிருந்தா. நாந்தான் யககா , அக்கா னு கூப்பிட்டு இலை பிரச்சினையை சொன்னேன்.அந்த அக்கா வும் உள்ள வந்து காண்ட்ராக்டர் கிட்ட சத்தம் போட்டாங்க.இப்படி இலை போட்டால் தினசரி வெளில விலை கொடுத்து இலை வாங்க முடியு மானு அவர்கிட்ட கேட்டதற்கு, “உனக்குலாம் பதில் சொல்லனுமுனு அவசியமில்லனு” சொன்னவுடன், முல்லை அக்கா அங்கே நின்னுகிட்டிருந்த பீடி சுத்தற பொம்பளைங்கள வெளிய வரச் சொன்னாக.எல்லோரும் வெளிய வந்தவுடன் பீடிக் கடை கதவை இழுத்துப் பூட்டினாக.நெட்டூருக்கும் தென்காசிக்கும் ஆள அனுப்பினாக.
எல்லாரும் பீடி கடை முன்னாடி உக்காந்து போராட ஆரம்பிச்சோம். மதியம் நெட்டூரிலிருந்து பீடி சங்கத் தலைவரு ராஜாங்கமும் தென்காசி யிலிருந்து வேல்முருகன் குருசாமி பரமசிவம் மாரியப்பன் நம்ம ஊரு அருணாசலம் பொம்பளை கள்ள கற்பகவல்லி தங்கம்மா சரஸ்வதி அக்கா எல்லாரும் பீடி சங்கத்தின் சிகப்பு கொடியை பிடித்து நின்று ஆர்ப்பாட்டம் பண்ணினோம்.தலைவர் ராஜாங்கம் உணர்ச்சி வேகத்தில் பேசினார். உடனே பயந்துபோய் காண்டுராக்டர் தலைவர்கள கூப்பிட்டு பேசினான்.இனி பீடி இலைகள் நல்ல இலைகள் போடுவதாக கூறியதால் எல்லோரும் இலை புகையிலை இப்பதான் வாங்கிட்டு வாரோம் .சங்கத்தின் கூட்டத்தில் நம்ப மருதம்புத்தூர் அண்ணாச்சி வீட்டுக்கு எதிர் வீட்டு காரன் மகாவிஷ்னுவும் வந்திருநதார்.அவரிடம் எங்க அண்ணாச்சி வீட்டாரிடம் எல்லோரயும்
நம்ப கோவில் கொடைக்கு வரச்சொல்லிட் டேன்.
சரி இப்ப நான் சோறு பொங்க போறேன்.நான் சமைச்சு முடிக்கிற வரைக்கும், செத்த நேரம் இந்த பீடி இலைகள வெட்டிகிட்டு இருங்க என்றாள். சீக்கிரம் சமயல முடியென்ற தொரைச்சாமியப் பார்த்து எங்க சனநாயக மாதர் சங்க கூட்டத்துல ஒருதடவ கற்பகவல்லி அக்கா சொன்னதாக,’ இந்த ஆம்பளைங்களுக்கு சமச்சு போட்டே நம்ம வாழ்க்கைள பாதி நாள் வீணாயிடுச்சுனு ‘, ‘அவிய சொன்னது கரெக்டாகத்தான் இருக்கு‘ என்றாள் பதிலுக்கு. தொரைச்சாமி இதயெல்லாம் காதுல வாங்காம பீடி இலைகள வேகமாக வெட்டி போட்டு கொண்டி ருந்தான். அவளும் சமையல முடிச்சுட்டு ஈரக் கைகள சேலை முந்தானையில் தொடச்சிட்டு அடுக்களைய விட்டு வெளியே வந்தாள். எல்லோரும்வேகம ஒன்னாக உக்காந்து இரவு சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தனர்.சேர்மக்கனி சாப்பிட்ட ஏனங்களை கழுவி கவிழ்த்து வைத்தாள். பின்பு பீடி இலைகள் இருந்த பீடி தட்டினை எடுத்தாள். “பீடி இலை எல்லாத்தையும் வேஸ்ட் எதுவு மில்லாமல் வெட்டி போட்டிருக்கிய, என்னயிருந்தா லும் தொரைக் குட்டி சாமர்த்தியக்காரர்தான் “ என்று நினைத்துக் கொண்டாள். “நான் பீடி சுத்திமுடிக்கநேரமாகும். நீங்க சீக்கிரம் தூங்கனும்னா ஒங்க அக்கா வீட்டுக்கு போங்க “என்றாள் சேர்மக்கனி. சரி என்று சொல்லிட்டு வெளியே வந்து வாசல் படியில் உட்கார்ந்தான்.அவளும் வெளியே வந்து தரையில் உட்கார்ந்து பீடித்