states

“இது போதாது” மதுரோ வலியுறுத்தல்

காரகஸ், டிச.1 - தங்கள் நாட்டின் எண்ணெய்த்துறையின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று வெனிசுலாவின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனமான செவ்ரோன் வெனிசுலாவில் தனது பணியை மேற்கொள்ள அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியை சரியான முடிவு என்று வரவேற்றுள்ள மதுரோ, இது போதாது என்றும், தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படாமல் பாதிப்புகள் நீங்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். 2018 ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவை வெனிசுலாவின் எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. அப்போது ஜனாதிபதியாக நிகோலஸ் மதுரோ தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அதை ஏற்காத எதிர்க்கட்சிகள் குவார்டோ என்ற எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை ஜனாதிபதியாக நியமிப்பதாக அறிவித்தன. போட்டி அரசாங்கம் உருவானது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் அவரை ஜனாதிபதியாக அங்கீகரித்தன. சில வெளிநாட்டுச் சொத்துக்களை போட்டி அரசாங்கம் கையாண்டு கொள்ளும் நிலையும் உருவானது. ஆனால் தங்கள் உத்தி தோற்றுப் போனதால், எதிர்க்கட்சிகளில் பெரும்பாலானவை வெனிசுலா அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுத்தன. மெக்சிகோவில் இடதுசாரி அம்லோ ஜனாதிபதியான பிறகு, அவர் எடுத்த முயற்சியால் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இந்த நிகழ்வுகளால் அழுத்தம் அதிகமாகி, அமெரிக்காவும் தனது தடைகளில் சிலவற்றை நீக்கியுள்ளது.