சென்னை, ஏப்.30- தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்றும் பணியை நூறு நாள் வேலைத் திட்டத்தில் சேர்க்க ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்நிய மரங்களை அகற்றுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு தொடர்ச்சி மலையில் வளர்ந்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவதற்கு நூறு நாள் வேலை திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்த முடியாது என்று ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்நிய மரங்களை அகற்றும் பணி, நூறுநாள் வேலை திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அமர்வு பிறப்பித்த உத்தரவில், நூறு நாள் வேலை திட்டத்தில் அந்நிய மரங்களை அகற்றும் பணிகளை சேர்க்கவும் நூறு நாள் வேலை திட்ட நிதியை அந்நிய மரங்களை அகற்ற பயன்படுத்தவும் வனப்பகுதியில் உள்ள அந்நிய மரங்களை அகற்றும் பணியில் பழங்குடியினரை அமர்த்தவும் உத்தரவிட்டனர்.