states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மூன்று நாட்களுக்கு  கனமழை எச்சரிக்கை

சென்னை,அக்.11- தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்கு நர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- வடதமிழக பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 12, 13, 14 ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக் கூடும். இதேபோல் திருவள்ளூர், வேலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சா வூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாத புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

வண்டலூர்   புதிய பேருந்து நிலையம்  திறப்பு  எப்போது?

சென்னை, அக்.11- சென்னையிலிருந்து தென் மாவட் டங்களுக்கு செல்லும் பேருந்துக ளுக்காக வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடியில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.  இதன் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த பேருந்து நிலைய பணிகள் தீபாவளிக்குள் முடிந்து  விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் ஒரு சில பணிகள்  முடிவடையாமல் உள்ளது. இந்த பேருந்து நிலையம் எப்போது திறக்கப் படும் என்று அமைச்சர் முத்துசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, வருகிற பிப்ரவரி மாதம் திறக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

1,771  புதிய பேருந்துகள்  வாங்க டெண்டர்!

சென்னை,அக்.11- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு புதிதாக 1,771 பேருந்துகள் வாங்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கோரியிருக்கிறது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபகாலமாக பேருந்துகளில் பயணம் செய்யும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு 1,771 புதிய பேருந்துகளை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது. இதில், டீசலில் இயங்கும் பிஎஸ் 6 ரக  3 விதமான பேருந்துகளை வாங்கு வதற்காக இந்த ஒப்பந்தம் கோரப்படு கிறது. சென்னை மாநகரப் போக்கு வரத்துக்கழகத்திற்கு 402 பேருந்துகளும், விழுப்புரம் மண்டலத்திற்கு 347 பேருந்து களும் வாங்க உள்ளது. சேலம் மண்டலத்திற்கு 303 பேருந்து களும், கோவைக்கு 115 பேருந்துகளும் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்ப கோணத்திற்கு 303 பேருந்துகளும், மதுரை மண்டலத்திற்கு 251 பேருந்து களும் வாங்க ஒப்பந்தம் கோரப் பட்டுள்ளது. மேலும் 11 மீட்டர் நீளமும், 90 சென்டி  மீட்டர்உயரத்தில் தரைத்தளமும் கொண்ட வகையில் பேருந்துகளை வாங்க  தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது”  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகம் புதிய சாதனை

சென்னை,அக்.11-  வெளிநாட்டிலிருந்து ஏபிஜே ஷிரீன் என்ற கப்பல் மூலம், 27,971 டன் எடையுள்ள இரும்புத் தாது துகள்கள் சென்னை துறைமுகத்துக்கு கடந்த 8 ஆம் தேதி கொண்டு வரப்பட்டது.  இந்த இரும்புத் தாது துகள்களை ஒரே நாளில் கப்பலில் இருந்து இறக்கி  சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன்பு கடந்த 2020 ஆம் ஆண்டு 22,686 டன் எடையுள்ள இரும்புத்  தாது துகள்கள் ஒரே நாளில் இறக்கி கையாளப்பட்டதுதான் இதுவரை சாதனை அளவாக இருந்து வந்தது. இந்த சாதனையை படைத்ததற்காக கப்பல் ஏஜென்ட் ஜே.எம்.பாக்ஸி  அண்ட் கோ, இறக்குமதி நிறுவனங்களான டிரான்ஸ்கோல் இம்பெக்ஸ், எம்டிசி பிசினஸ் ஆகிய நிறுவனங்கள், சரக்குகளை கையாண்ட பி.எல். டிரான்ஸ்போர்ட் நிறுவனம், துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சென்னைத் துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

புதிதாக 50 சுகாதார மையங்கள்  திறக்க அனுமதி: அமைச்சர்

சென்னை,அக்.11- தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக 25 ஆரம்ப சுகாதார மையமும், 25 நகர்ப்புற சுகாதார மையமும் அமைக்க அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 46 சுகாதார மாவட்டங் களைச் சேர்ந்த சுகாதார இயக்கு நர்கள், இணை இயக்குநர்கள், 36 மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல்வர்கள், 64 மருத்துவ மனை இயக்குநர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர், “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலங்க ளில் எடுக்க வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து  அதிகாரிகளுடன் விரிவாக  ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது”என்றார். கொரோனா தடுப்பூசி முதல் தவணை 96 விழுக்காடும் இரண்டாம்  தவணை 91 விழுக்காடும் செலுத்தப் பட்டு உள்ளது. பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்துவதற்கு தற்போது 9 லட்சம் டோஸ் தடுப்பூசி கள் கையிருப்பில் உள்ளன. விரைவில் அவற்றை செலுத்தி முடிக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார். 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ கத்திற்கு புதிதாக 25 ஆரம்ப சுகாதார  மையமும், 25 நகர்ப்புற சுகாதார மையமும் துவங்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எந்த எந்த  பகுதிகளில் அமைப்பது என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப் படும் எனவும் அமைச்சர் தெரி வித்தார்.

சீனாவில்  உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான்

பெய்ஜிங், அக். 11- சீனாவில் ஒமைக்ரான் கொரோ னா வைரசின் மாறுபாடு அடைந்த 2 புதிய வகை வைரஸ்கள் கண் டறியப்பட்டுள்ளன. ஷாவோ குவான், யாண்டாய் நகரங்களில் பிஎப்.7 வகை மாறுபாடும், ஷாவோகுவான் நகரின் ஒரு  சில பகுதிகளில் பிஏ.5.1.7 வகை மாறுபாடும் கண்டறியப் பட்டுள்ளது. “பிஎப்.7 மற்றும் பிஏ.5.1.7” வகை மாறுபாடுகள் மிகவும் எளிதாக தொற்றும் தன்மை கொண்டவை. முந்தைய நோய் எதிர்ப்பு சக்தியை எளிதில் சிதைத்து பரவும் வீரிய மிக்கவை. இதில் பிஎப்.7 வகை ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், முழு மையாக தடுப்பூசி போடப் பட்டிருந்தாலும் கூட எளிதாக தாக்கும் குணம் கொண்டது என  மருத்துவ வல்லுநர்கள் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்.

சபரிமலை நடை 17ஆம் தேதி திறப்பு

பத்தனம்திட்டா, அக். 11- மலையாளத்தின் துலாம் மாத (தமிழ் மாதத்தின் ஐப்பசி) பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவி லின் நடை அக்டோபர் 17-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. அக்டோபர் 22-ஆம் தேதி வரை 5 நாள்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பூஜைகள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக் கான மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15-ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது. நவம்பர் 16-ம் தேதி முதல் பக்தர்கள் தரி சனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ள நிலையில், பக்தர்கள் மகர, மண்டல பூஜைக்கு சபரிமலை அதிகார பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு

மும்பை, அக். 11- பணமோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்ச ரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலை வருமான அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கிய  மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட  உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. உடல் நலக்குறைவு  மற்றும் மருத்துவ உதவிக்காக அனில் தேஷ்முக் கிற்கு மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

ஈரானில் போராட்டம் தீவிரமடைகிறது

டெஹ்ரான், அக்.11- பெண்கள் உடை தொடர்பான விவகாரத்தில் மூன்று வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மஹ்சா அமினி என்ற 22 வயதுப் பெண், ஈரான் பெண்களுக்குரிய உடையை அணியவில்லை என்று காரணம் காட்டி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் உயிரிழந்ததால், பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெண்கள் தங்கள் உடை அணிவதற்கான உரிமை கோரி திரண்டு வருகிறார்கள். இந்தப் போராட்டங்களை அடக்குவதற்காக ஈரான் காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்திருக்கிறார்கள். மத ரீதியான கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைக்கவச உடைகளை எரித்துப் போராடுகிறார்கள். அமினியின் சொந்த ஊரான சக்கேஸ் நகரத்தில் துப்பாக்கிக் குண்டுகள் சுடப்படும் சத்தம் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில இடங்களில் எந்திரத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மக்களுக்கிடையே தகவல் பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்த இணையதளங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. தெருக்களில் ஆர்ப்பாட்டங்கள், மாணவர்கள் கல்வி நிலையங்கள் புறக்கணிப்பு மற்றும் தனிநபர்களின் பல்வேறு வகையான போராட்டங்கள் என்று பன்முகத்தன்மை கொண்டதாக இந்த எதிர்ப்பு இருக்கிறது. இஸ்லாமிய மத ரீதியான கட்டுப்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தும் கருத்துகளும் இளைஞர்களிடமிருந்து எழுந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் அரசுக்கு எதிராக இந்த அளவுக்கு பெரிய போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.