states

தஞ்சாவூர் சர்க்கரை ஆலையில் அரவை நிறுத்தம்: கண்டித்து கரும்பு விவசாயிகள் சாலை மறியல்

தஞ்சாவூர், மே 3-  தஞ்சாவூர் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் அரவை பணியை நிறுத்தியதால் கரும்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளிடம் கரும்பு பயிர் பதிவு செய்து அரவை பணியை செய்து வருகிறது.  நடப்பு ஆண்டில் டிசம்பர் இறுதியில் அரவை பணி தொடங்கி ஏப்ரல் 27-ஆம் தேதி ஆலையை மூடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பதிவு செய்யப்பட்ட கரும்புகள் ஆயிரக்கணக்கான மெட்ரிக் டன் கரும்பு வெட்டப்படாததால் விவசாயிகள் அரவை பணியை தொடர்ந்து நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.  இந்த கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனாலும் பதிவு செய்யப்பட்ட அனைத்து கரும்பும் வெட்டப்படவில்லை. இந்நிலையில் ஆலை 30-ம் தேதி அரவை பணியை நிறுத்தியது.  இதனால் அதிர்ச்சி அடைந்த கரும்பு விவசாயிகள் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் ஒரத்தநாடு புதூர் பகுதியில் கரும்பு ஏற்றிய லாரிகளை சாலையின் குறுக்காக நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.