சென்னை, அக். 30- மரபணு மாற்றுக் கடுகு நம் உணவுத் தட்டுக்கு வரும் விஷம் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மரபணு மாற்றப்பட்ட கடுகை திறந்தவெளியில் பயிரிடுவதற்கும் மற்றும் பரிசோதனை செய்வதற்குமான அனுமதியை வழங்குமாறு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அத்துறையின் கீழ் இயங்கி வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு கடந்த 18ஆம் தேதி பரிந்துரைத்துள்ளது.
மனித நலனையும் சூழல் நலனையும் கருத்தில் கொள்ளாத ஒன்றிய அரசின் இந்த முடிவை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. டிஎம்எச்-11 (தாரா மஸ்டர்ட் ஹைப்ரீட்-11) என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட இந்த கடுகை தில்லி பல்கலைக்கழகத்தின் மரபணு மாற்று பயிர்களுக்கான மையம் (சிஜிஎம்சிபி) உருவாக்கியுள்ளது. மரபணு மாற்று தொழில் நுட்பத்தின் மூலம் பார், பர்னஸ் மற்றும் பர்ஸ்டார் என்னும் மரபணுக்கள் கடுகின் மரபணுக்களோடு சேர்க்கப்பட்டு இந்த புதிய கடுகு உருவாக்கப்பட்டுள்ளது. மரபணு மாற்றத்தின் மூலம் தன்பால் மகரந்தச்சேர்க்கையை கட்டுப்படுத்தினால், அயல் மகரந்தச்சேர்க்கை அதிகரிக்கும். அதன் மூலம் விளைச்சல் அதிகரிக்கும் என்பதே இவர்களின் வாதம். ஸ்ட்ரெப்டோமைசஸ் ஹைக்ரோஸ்கோபிகஸ் எனும் பாக்டீரியாவில் எடுக்கப்பட்ட மரபணுவை கடுகில் சேர்ப்பதால் பூச்சித் தாக்குதலுக்கு எதிரான சத்துக்களை அதிகரிக்கும் எனவும் அரசு கூறுகிறது.
போதுமான ஆய்வுகளும், தரவுகளும் இல்லாமல் தில்லி பல்கலைக்கழகம் சமர்ப்பித்த அறிக்கைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பாதிப்புகள் இல்லை என்ற முடிவுக்கு நிபுணர் குழு வந்திருக்கக் கூடாது. அதேவேளையில் இந்த நிபுணர் குழுவானது இந்திய தட்பவெப்ப சூழலில் இந்த டிஎம்எச்-11 கடுகு எந்த விதமான தாக்கத்தை உண்டாக்கும், தேனீக்கள் போன்ற உயிரினங்கள் மீது என்ன தாக்கத்தை உண்டாக்கும் என்பதை கண்காணிக்க அறிவுறுத்தியிருந்தது. இப்படி நிபுணர் குழுவே கூடுதல் ஆய்வுகள் தேவை என கருதியிருக்கும் நிலையில் அவசர அவசரமாக இக்கடுகிற்கான அனுமதியை மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு வழங்கியிருப்பது இந்திய மக்கள் மீதும் நம் நாட்டின் சூழல் மீதும் ஒன்றிய அரசுக்கு அக்கறை இல்லாததை வெளிக்காட்டுகிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட டிஎம்எச்-11 கடுகால் பிற பயிர் வகைகளுக்கு எத்தைய பாதிப்புகள் உண்டாகும், பூர்விக கடுகு பயிர்கள் மீதான தாக்கம் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களை திறந்த வெளியில் பயிர் செய்யும்போது பூர்விக செடிகளின் மரபணுக்கள் மாற்றம் அடைவதற்கான சான்றுகள் உலகெங்கும் உள்ளன. மரபணு பரிமாற்றம் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் மூலம் ஒருவேளை பிற தன்பால் மகரந்தச்சேர்க்கை செய்யும் பயிர்களை இக்கடுகு பாதிக்குமா என்பது குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. இது நம் நாட்டின் மரபின வளத்தை பெரிதும் பாதிக்கும். இந்தக் கடுகு மனித ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கும் என்பது தொடர்பான ஆய்வுகளும் தரவுகளும் இல்லாமல் இதற்கு வழங்கப்படும் அனுமதி என்பது இந்திய மக்களை சோதனை எலிகளாக்கும் முயற்சியாகும். இந்தக் கடுகிற்கு அனுமதி வழங்கப்பட்டால் நம் உணவுச் சங்கிலியில் விரைவில் இது இடம்பெறலாம். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் இந்த மரபணு மாற்றப்பட்ட (ஆண் தன்மை நீக்கப்பட்ட) கடுகு நம் உணவுத் தட்டிலும் இடம் பெறும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதா மரபணு மாற்றுப் பயிர்களை கடுமையாக எதிர்த்துள்ளனர். அதே நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசின் ஆபத்தான இந்த முயற்சியை எதிர்க்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.