states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அன்னதான கூடத்துக்கு இந்திய உணவுப்பாதுகாப்புத் துறை தரச்சான்று வழங்கியுள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள 26 கோவில்களின் அன்னதான கூடங்களுக்கும்  தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள தனது நிறுவன வாடிக்கை யாளர்களுக்கு வணிக மதிப்பை விரைவுபடுத்து வதற்காக இன்போசிஸ் தனியாக பிரைவேட் 5ஜி  ஏ-சர்வீஸை (5G-as-a-Service) அறிமுகப்படுத்தியது.

மார்ச் 9 அன்று நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்த தையடுத்து தலைநகர் கொழும்பில் போராட்டங்கள் வெடித்தன. தேசிய மக்கள் சக்தி (NPP) ஏற்பாடு செய்திருந்த பேரணியை கலைக்க போலீசார் முயற்சி மேற்கொண்ட பொழுது ஏற்பட்ட வன்முறையில் 15 பேர் காயமடைந்தனர்.

தில்லியில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், மார்ச் 1,2 தேதிகளில் வெப்பநிலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும், கிட்டத்தட்ட 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என  இந்திய வானிலை ஆய்வு மைய மூத்த அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக இருந்த நாகராஜன் வெங்கட்ராமன் ஜனவரி மாதம் கால மான நிலையில் புதிய தலைவராக சரோஜினி நாயுடு  மருத்துவக்கல்லூரி (உத்தரப்பிரதேசம்) பேராசிரியர் டாக்டர் பிரசாந்த் லவானியா நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் யார் யாரை எங்கு உட்கார வைக்க  வேண்டும் என்பது சபாநாயகரின் உரிமை என  சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்  செல்வம் அருகருகே உட்காருவார்களா என்ற செய்தி யாளர்களின் கேள்விக்கு தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு பதிலளித்துள்ளார்.

இத்தாலி அருகே உள்ள கடல் பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற சிறிய ரக கப்பல் கவிழ்ந்து 7 குழந்தைகள் உட்பட 59  பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா 2021-ஆம் ஆண்டு டிசம்பர்  மாதம் மறுசீரமைப்புப்பணிக்காக இடைக்கால ஓய்வு  பெற்றது. முழுமையான பழுது பார்ப்புக்காக கர்நாடக  மாநிலம் காவார் கடற்படை தளத்துக்கு போர்க்கப்பல் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 15 மாதங்கள் பிறகு இந்திய ராணுவ படையில் மீண்டும் இணைந்த ஐஎன்எஸ் விக்ரமாதித்யா.

உலகச் செய்திகள்

சவூதி அரேபியாவின் முற்றுகைக்கு ஆளாகியுள்ள நிலையிலும், ஏமன் மக்கள் பாலஸ்தீனத்தில் நடைபெறும் இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளனர். தலைநகர் சனாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.  ஏமன் மண்ணையும் படையெடுப்பாளர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினார்கள். தலைநகர் சனாவில் மட்டுமில்லாமல், சாடா உள்ளிட்ட மேலும் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

காலரா நோய் பெரும் அளவில் பரவும் அபாயம் இருப்பதாகவும், அதன் பாதிப்பினால் ஏராளமானோர் இறக்க நேரிடலாம் என்றும் உலக சுகாதாரக்கழகம் எச்சரித்திருக்கிறது. உலகம் முழுவதும் ஏற்படும் இறப்புகளில் 2 விழுக்காடு காலராவால் பாதிக்கப்பட்டதால் நேரிடுகிறது என்றும், இது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அக்கழகக் காலரா தடுப்புப் பிரிவின் பிலிப் பார்போசா கூறியுள்ளார். தற்போது 20 நாடுகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

கியூப மண்ணில் சட்டவிரோதமாக அமெரிக்கா வைத்திருக்கும் குவாண்டனாமோ தண்டனை முகாமை இழுத்து மூட வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிகஸ் வலியுறுத்தியுள்ளார். 117 சதுர கி.மீ. உள்ள இந்தப் பகுதியைக் கடந்த 120 ஆண்டுகளாக அமெரிக்கா ஆக்கிரமித்துள்ளது. கியூப மக்களின் விருப்பத்திற்கு எதிராக அமைந்துள்ள இந்த முகாமை அமெரிக்கா காலி செய்துவிட்டு வெளியேற வேண்டும் என்றும் ரோட்ரிகஸ் கூறியுள்ளார்.