சூபின், நவ.16- வழக்கறிஞரும், சுயேச்சை வேட்பாளராக ஸ்லோவேனியாவின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவருமான நடாஷா பிர்க் முசார் வெற்றி பெற்றுள்ளார். ஸ்லோவேனியாவின் ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் எந்த வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் முதலிடம் பெற்ற வலதுசாரி வேட்பாளர் ஆண்ட்சே லோகர் மற்றும் இரண்டாவது இடம் பெற்ற சுயேச்சை வேட்பாளர் நடாஷா ஆகிய இருவரும் இரண்டாவது சுற்றில் போட்டியிட்டனர். பெரு நிறுவனங்களும், ஊடகங்களும் வலதுசாரி வேட்பாளர் லோகருக்கு ஆதரவாகக் களம் இறங்கின. ஆனால், 53.83 விழுக்காடு வாக்குகளைப் பெற்று நடாஷா வெற்றி பெற்றார். கடந்த 30 ஆண்டுகளாக ஸ்லோவேனியா அரசியலில் முக்கியமான பங்காற்றி வந்த போருட் பஹோரின் இடத்தில் நடாஷா அமரவிருக்கிறார். சமூகப் பாதுகாப்பு அம்சங்கள், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை முன்னிறுத்தித் தனது பிரச்சாரத்தை நடாஷா மேற்கொண்டார். ஸ்லோவேனியாவின் ஜனாதிபதிதான் அந்நாட்டின் படைகளுக்குத் தலைமைப் பொறுப்பில் இருப்பார். ஏராளமான உயர் அதிகாரிகளை நியமிக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. ஆனால் பெரும்பாலான நியமனங்களுக்கு அந்நாட்டின் நாடாளுமன்றம் அனுமதி தர வேண்டும். ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் புதிய ஜனாதிபதிக்கு ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.