ஐமுகூ ஆட்சியில் 827 ரூபாய் எரிவாயு மானியம் தரப்பட்டது!
“காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஒரு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ. 414 ஆக இருந்தது. ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூ. 827 மானியமாக வழங்கப்பட்டது. இன்று 999 ரூபாயாக உள்ளது. மானியமோ ஜீரோ. சாமானிய மக்களின் பாதுகாப்பிற்காக காங்கிரஸ் போட்டிருந்த அனைத்து பாதுகாப்பு வலைகளையும் நரேந்திர மோடி அரசு அகற்றிவிட்டது. இன்று கடுமையான பணவீக்கம், வேலையின்மை மற்றும் மோசமான நிர்வாகத்திற்கு எதிராக கோடிக்கணக்கான இந்திய குடும்பங்கள் போராடி வருகிறார்கள்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடி அரசை விமர்சித்துள்ளார்.
பாஜக சித்தாந்த ரீதியாக சமஸ்கிருதத்தோடு நிற்கிறது!
“பாஜக சித்தாந்த ரீதியாக சமஸ்கிருதத்துடன் நிற்கிறது. அந்த வகையில், கட்சியும், பிரதமர் நரேந்திர மோடியும் இந்திய மரபுகள் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் எந்த முயற்சியையும் கைவிட மாட்டார்கள். சமஸ்கிருதம் ஐ.டி. துறைக்கு மிகவும் பொருத்தமானது என்கிறார் கோவிந்த். விஞ்ஞானம், அறிவு, கணிதம் மற்றும் தத்துவம் ஆகியவை சமஸ்கிருதத்தில் வேரூன்றியுள்ளது. இந்தியா அதன் கலாச்சாரத்தால் உலகிலேயே நிகரில்லாதது” என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கேரளத்தில் பேசியுள்ளார்.
“மசூதிகளில் ஒலிப்பெருக்கி: அடிப்படை உரிமை அல்ல!”
உத்தரப் பிரதேச மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அம்மாநில அரசு அப்புறப்படுத்தி வருவதை எதிர்த்து, பதோன் மாவட்டத்தைச் சேர்ந்த இர்பான் என்பவர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இர்பான் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றமும் இந்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி விவேக் குமார் பிர்லா, “மசூதிகளில் ஒலிப்பெருக்கி வைத்திருப்பது அடிப்படை உரிமை கிடையாது” என்று தீர்ப்பளித்துள்ளார்.
முக்கியப் பிரச்சனை கொரோனா-தான்; சிஏஏ அல்ல!
கொரோனா அலை முடிந்த பிறகு குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) நடைமுறைப்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இந்நிலையில், பாஜக கூட்டணியில் இருக்கும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், “கொரோனா தொற்றுப் பரவல்தான் மிகவும் முக்கிய மானது; குடியுரிமை திருத்தச் சட்டம் அல்ல!” என தெரிவித்துள்ளார். “அதிகரித்து வரும் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். அதன்பின்னரே மற்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
கேரளத்தில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை..?
கேரளத்திற்கு அதிக மழைப் பொழிவை வழங்கும் தென்மேற்குப் பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரம் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு அது முன்கூட்டியே தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதாவது, ஜூன் முதல் வாரத்திற்கு பதில் மே மாத மத்தியிலேயே பருவமழை தொடங்கும் என்று தெரிவித்துள்ளது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கேரளத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பழங்குடி பெண்ணை வல்லுறவு செய்த சப்-இன்ஸ்பெக்டர்
ராஜஸ்தான் மாநிலம் பாட்லா காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் ஜக்தீஷ் பிரசாத். 59 வயதாகும் இவர் துணை ஆய்வாளராக உள்ள நிலையில், இன்னும் ஓராண்டில் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 25 வயது பழங்குடி பெண்ணை பாலியல் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பழங்குடி பெண்ணின் கணவர் அளித்த புகாரின்பேரில், பாலியல் வல்லுறவு மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் ஜக்தீஷ் பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.