states

img

32 ஆயிரம் ஆரம்ப நிலை பணியிடங்களை நிரப்புக!

சென்னை, நவ. 2 - மின்வாரியத்தில் காலியாக உள்ள 32ஆயிரத்து 500 ஆரம்ப நிலை பணியிங்களை நிரப்பக் கோரி வியாழனன்று (நவ.2) மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களை கடுமையாக பாதிக்கும் திறன்மிகு அளவி (ஸ்மார்ட் மீட்டர்) பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும், மின்வாரிய பணிகளை தனியார்மயமாக்கும் இ-டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும், 1 மற்றும் 2ஆம் நிலை அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும், டேன்ஜெட்கோவை பசுமை மின்சாரம் என்ற பெயரில் மேலும் பிரிக்க கூடாது,

வாரிய ஆணை எண் 2ஐ திரும்பப் பெற வேண்டும், 1.12.2019க்கு பிறகு பணியில் சேர்ந்த கேங்மேன் உள்ளிட்ட அனைவருக்கும் 6 விழுக்காடு ஊதிய உயர்வை ஒப்புக் கொண்டபடி வழங்க வேண்டும், நிலுவை அலவன்ஸ்சுக்காக அமைக்கப்பட்ட குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் மாநிலம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை தெற்கு திட்டம் சார்பில் கே.கே.நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலுகம் முன்பு  மின்ஊழியர் மத்திய அமைப்பின் சென்னை மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் மத்திய அமைப்பின் மாநில தலைவர் தி.ஜெய்சங்கர், அண்ணா தொழிற்சங்க பேரவை பொதுச் செயலாளர் விஜயரங்கன், பணியாளர் சம்மேளன பொதுச் செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.

மேற்கு சென்னை திட்டம் சார்பில் திருமங்கலம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு  நடந்த போராட்டத்தில் மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மாநிலச் செயலாளர் கே.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்தியசென்னை திட்டம் சார்பில் வள்ளுவர் கோட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பணியாளர் சம்மேளன மாநிலத் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். பொறியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சம்பத்குமார், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் துணைத் தலைவர் எம்.தயாளன், செயலாளர் எஸ்.கண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.