states

img

சிறை வாசிகளுக்கு புத்தகங்களைப் பரிசளித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள்

புதுக்கோட்டை, ஆக.4 - புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சிறைவாசி களுக்கு புத்தகங்களைப் பரிசளித்த பார்வை இழந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் செயல் அனைவரையும் நெகிழ வைத்தது. புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் புதுக்கோட்டையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கு செல்ல வேண்டும் என்ற தங்கள் ஆசையை ஆசிரியர்களிடம் வெளிப்படுத்தினர். இதனையடுத்து பார்வைத்திறன் குறையுடைய 20 மாணவர்களை விழாக் குழுவினர் புத்தகத் திருவிழா விற்கு அழைத்து வந்தனர். அவர்களுடன் தலைமை ஆசிரி யர் வடிவேலன் மற்றும் பணியாளர்கள் வந்திருந்தனர். புத்தகத் திருவிழாவிற்கு வந்த அவர்களுக்கு, இதரப் பள்ளிகளில் இருந்து வருகை தந்த மாணவ, மாணவிகள் இருபுறங்களிலும் நின்று கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் அவர்களை அழைத்து வந்தனர். புத்தக அரங்கத்திற்குள் சென்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் புத்தகங்களைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தனர். மேலும், சிறைக் கைதிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் அரங்கிற்கு வந்த அவர்கள், பல்வேறு தலைப்பிலான புத்தகங்களை வாங்கி பரிசளித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “நாங்கள் வரும்போது எங்களை சக மாணவர்கள் கைதட்டி வரவேற்றது மிகுந்த உற்சாகமாக இருந்தது. இங்குள்ள புத்தகங்களை எங்களால் வாசிக்க முடியாது. எங்களால் பிரெய்லி வடிவிலான எழுத்துகளை மட்டுமே வாசிக்க முடியும். ஆகவே, நாங்கள் சிறைக் கைதிகளுக்கு புத்தகங்களை வாங்கி அனுப்பி உள்ளோம்” என்றனர்.