states

கோடையிலும் நிரம்பி வழியும் அணைகள்: மகிழ்ச்சியில் விவசாயிகள்

சென்னை,மே 17- வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும்  ஆந்திர வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடைகாலத்தில் பாலாற்றில் தண்ணீர் வழிந்தோடுகிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது.  இதன் காரணமாக பாலாற்றின் நீர்ப்பிடிப்புப்  பகுதியில் உள்ள கிளை ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக வாணியம்பாடி அடுத்த புல்லூரில் பாலாற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ள ஆந்திரா தடுப்பணை நிரம்பி உபரி நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.  இந்த உபரி நீரானது வாணியம்பாடி வரை பாலாற்றில் வந்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழையால்  குடியாத்தம் அருகே  உள்ள மோர்தானா அணையும் நிரம்பி வழி கிறது. இதன் காரணமாக அணையில் இருந்து  வெளியேற்றப்படும் உபரி நீர் பெரிய ஏரி  பகுதிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்தாண்டு  நவம்பர்  மாதம் பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத் தக்கது.