states

மிட்டாய் திருடியதாக தலித் மாணவர்களை கட்டி வைத்து தாக்கிய கொடூரம்

மதுரை, ஏப்.5- மிட்டாய் திருடியதாக பட்டியல் இன மாணவர்களை கட்டி வைத்து தாக்கிய கொடூரமான செயல் மதுரை அருகே நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டம், காரை கேணியை சேர்ந்தவர் சிவச்சந்திரன் மகன் அன்புதாஸ் எம்.வீரபட்டியை சேர்ந்த நாகராஜ் மகன் சக்திவேல். பட்டியல் இனத்தைச் சார்ந்த இவர்கள் இருவரும் திருமங்கலம் வட்டம் அச்சம்பட்டியில் உள்ள அரசு மேல் நிலை பள்ளியில் 9வகுப்பு படித்து  வருகின்றனர்.  அருகில் உள்ள  ஆதிதிரா விடர் நல விடுதியில் தங்கியுள்ளனர். மார்ச் 21 அன்று மாணவர்கள் இருவரும் அருகில் உள்ள ஆலம் பட்டிக்கு சென்று அங்குள்ள  சந்தோஷ் (பிற்படுத்தப்பட்டவர்) என்பவரின் கடையில் மிட்டாய் வாங்கியுள்ளனர். கடையில் வாடிக்கையாளர்களும் அதிகமாக இருந்துள்ளனர். அந்த நேரத்தில் கடைக்காரர் திடீரென இந்த  இரு மாணவர்களையும் மிட்டாய்   திருடியதாக குற்றம் சுமத்தி கூச்சல் போட்டுள்ளார். தொடர்ந்து கடைக்காரரும் அவரது உறவினர் களும் மாணவர்கள் இருவர்களையும்  தூணில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இத் தகவல் அறித்து அனைகரை பட்டியை பூர்வீகமாக கொண்ட விடுதி  காப்பாளர் விஜயன் ஆலம்பட்டிக்கு வந்து மாணவர்கள் இருவரையும் விடுதியை விட்டு உடனடியாக அனுப்பி விடுவதாக கூறியுள்ளார். இந்த நிலையில்   மாணவர் சக்திவேலின் உறவினர் ஒருவர்,  மாணவர்களை தாக்கியவர்களிடம்  சமாதானம் பேசி, கட்டி வைத்து  தாக்கப்பட்ட  மாணவர்களை விடு வித்துள்ளார். இச்செய்தி ஊடகத்தில்   வெளியானதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சிவபிரசாத் அறிவுறுத்தலின் படி திருமங்கலம் தாலுகா  காவல் துறை, கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் பெற்று

குற்றவாளி சந்தோஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 294(b),323,342,506(1) of IPC மற்றும் பிரிவு 75 of JJ act (குழந்தைகள் மீதான வன்முறை) பிரிவுகளில் வழக்கு  பதிவு செய்துள்ளனர்.   இந்நிலையில் பட்டியல் இன மாணவர்கள் தாக்கப்பட்ட தகவல் அறிந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்  செ.முத்துராணி, மாவட்டத் துணைத் தலைவர் வி.பி.முருகன், ஆதி தமிழர் கட்சியின் கருப்பசாமி, ஆனந்த் மற்றும் மகாலெட்சுமி ஆகியோர் ஆலம்பட்டி கிராமம், அச்சம்பட்டி பள்ளி, ஆதி திராவிடர் நல விடுதி, திருமங்கலம் காவல்  நிலையம் ஆகிய இடங்களில்   திங்கட்கிழமை (மார்ச் 3) கள ஆய்வு மேற்கொண்ட போது நடந்த சம்பவம் குறித்து தெரியவந்தது. 

தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் கோரிக்கைகள் 

 எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். குற்றவாளிகள் அனை வரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிய ஆதி திராவிடர் நல விடுதி காப்பாளர்  மீது  சட்டபூர்வமான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  மாணவர்கள் இருவரை யும் மருத்துவ ரீதியாக ஆற்றுப்படுத்தி (கவுன்சிலிங்),  அவர்கள் படிப்பை தொடர்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும். பாதிக்கபட்ட மாணவர்களுக்கும், குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பும்,நிவாரணமும் வழங்கிட வேண்டும்  என தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கள ஆய்வுக்குழு தமிழ்நாடு அரசையும்,மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தியுள்ளது.