states

கச்சா எண்ணெய் விலை இந்தியாவில் மேலும் உயரும்?

புதுதில்லி, அக். 7 - சர்வதேச சந்தையில் மீண்டும் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 93 டாலர்களை எட்டியுள்ளது.  ஓபெக்கின் உற்பத்தி குறைப்பு முடிவுக்கு பிறகு, இந்த  வாரத்தில் மட்டும் கச்சா எண்ணெய் விலை 11 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும்100 டாலர்களை எட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்ற அச்சத்தால் கடந்த சில வாரங்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டே வந்தது. இதனிடையே, பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும்  நாடுகளின் கூட்டமைப்பான ‘ஓபெக்’ நாடுகளின் ஆலோசனைக் கூட்டம், ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில், கடந்த புதனன்று நடைபெற்றது.  இதில், கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு 20 லட்சம் பேரல்களாக (சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் இது 2 சதவிகிதம் ஆகும்) குறைக்கப் போவதாக ‘ஒபெக்’ நாடுகள் அறிவித்தன. நவம்பர் மாதம் நடைமுறைக்கு வரும் இப்புதிய உற்பத்தி நடைமுறை, 2023 டிசம்பர் வரையில் அமலில் இருக்கும் என்றும் கூறின. கொரோனா பெருந்தொற்று பாதிப்புக் காலத்திற்குப் பின், கச்சா எண்ணெய் உற்பத்தியை இந்த அளவுக்கு குறைக்க ஓபெக் முடிவெடுத்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது கடந்த ஜூன் மாதத்தில் பேரலுக்கு 123 டாலர்கள் என்ற அளவில் இருந்தது. இது தற்போது 93.50 டாலர்கள் என்ற அளவில் காணப்படுகின்றது. இது சுமார் 24 சதவிகிதம் சரிவு ஆகும்.  இந்நிலையில் ‘ஓபெக்’ நாடுகளின் புதிய முடிவால் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலரைத் தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது, தற்போதைய சந்தை விலையைக் காட்டிலும் 7.5 சதவிகிதம் அதிகமாகும்.  உக்ரைன் - ரஷ்ய போரினால் சர்வதேசச் சந்தையில் ஏற்கெனவே கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை நிலவி வரும் சூழலில்,  விலையும் அதிகரித்தால், அது இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்;  பெட்ரோல், டீசல் விலைகள் கணிசமாக உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது. “சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் அது ரஷ்யாவுக்கு சாதகமாக அமையும். ஏனெனில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் அந்த நாட்டுக்கு முக்கிய பங்கு உள்ளது. எரிபொருளின் விலை உயர்வால் கிடைக்கும் கூடுதல் பணத்தை உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு ரஷ்யா பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. எனவே,  ஓபெக் கூட்டமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது” என்று அமெரிக்காகூறியுள்ளது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி ஓபெக் நாடுகள், கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும்பட்சத்தில், அது அமெரிக்கா உள்ளிட்ட  பல நாடுகளையும் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தும். இந்தியா விலும் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்வதற்கு வழிவகுக்கும். குறிப்பாக பெட்ரோல் டீசல் விலை, சமையல் எரிவாயு விலை, மின்சார கட்டணம் என அனைத்தின் விலையும் கூடலாம். இது செலவினை அதிகரிக்க வழிவகுக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.