வாஷிங்டன், செப். 2 - பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பெருமுதலாளி கவுதம் அதானி ஆகியோர் மீது இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு தொடுத்துள்ளார். அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரிச்மாண்ட் நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளி டாக்டர் லோகேஷ் வய்யுரு. இவர் இரைப்பை குடல் நிபுணராக பணி யாற்றி வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை லோகேஷ் வய்யுரு தாக்கல் செய்துள்ளார். அதில், “இந்தியப் பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தொழிலதிபர் கவுதம் அதானி, உலக பொருளாதார மன்றத்தின் தலை வர் பேராசிரியர் க்ளாஸ் ஷ்வாப் ஆகி யோர் தங்கள் நாடுகளில் பெரும் ஊழல்கள் செய்து அதன் வாயிலாக ஈட்டிய கோடிக் கணக்கான ரூபாய் பணத்தை அமெரிக்காவுக்கு பணப்பரி மாற்றம் செய்துள்ளனர்.
மேலும், ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் வாயி லாக அரசியல் எதிரிகளை உளவு பார்த்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த மே 24ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு தொடர்பாக ஜூலை 22-இல் நீதிமன்றம் ‘சம்மன்’ அனுப்பி யது. இந்த சம்மன் ஆகஸ்ட் 4-இல் இந்தியாவில் அளிக்கப்பட்டது. சம்மன் அளிக்கப்பட்டதற்கான ஆதாரத்தை ஆகஸ்ட் 19-இல் டாக்டர் லோகேஷ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதுகுறித்து நியூயார்க்கைச் சேர்ந்த பிரபல இந்திய-அமெரிக்க வழக்கறிஞர் ரவி பாத்ரா அளித்துள்ள பேட்டியில், “இது ஒரு இறந்த வழக்கு. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க வாழ் இந்திய மருத்துவர் லோகேஷ் என்பவர் மே 24ஆம் தேதி வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கில் எந்தவொரு ஆவண ஆதாரங்களும் இல்லை. இருப்பினும் சம்பந்தப் பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.