பா.ஜ.க சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் பாண்டிய நாடு - பல்லவ நாடு என தமிழ்நாட்டை பிரிப்போம் என்று பேசியுள்ளார். அது ஏதோ யோசிக்காமல் பரபரப்பிற்காக பேசிய மேடைப் பேச்சு அல்ல. மொழி வாரி மாநிலங்களை உடைத்து பலவீனப்படுத்துவது கார்ப்பரேட் - இந்துத்துவா கூட்டணி இணைகிற புள்ளிகளில் ஒன்று. உலகமயத்திற்கு மொழி வாரி மாநிலங்கள் பிடிக்காது. எந்தவொரு முற்போக்கு அடையா ளத்தின் அடிப்படையிலும் மக்கள் ஒன்றுபடுவது மூல தனத்தின் லாப வேட்டைக்கு தடை என்று நினைக்கும். தாராளமயம், தனியார்மயக் கொள்கை களுக்கு எதிர்ப்பு எழும்பும் என்று கருதும்.
இந்தியாவின் பிராந்திய முதலாளித்துவ கட்சிகள் நவீன தாராளமய பாதையை ஏற்றாலும் கூட, மக்கள் தங்கள் மாநிலங்களில் அமையும் பொதுத் துறை நிறுவனங்களை தங்களின் நல னுக்கானது என்று கருதுவதால், குறிப்பிட்ட முன் மொழிவுகளை எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். இது உலகமயப் பாதையில் வேகத் தடையாகவும் அமைகிறது. ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் தலைமை யகத்தை கொண்ட நால்கோ (நேசனல் அலுமினியம் கார்ப்பரேசன்) தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்பு வந்த போது “நால்கோ ஒடிசாவின் பெருமை” (Pride of Odisa) என்று சொல்லி பிஜு ஜனதா தளம் தலைவரும், முதல்வருமான நவீன் பட்நாயக் எதிர்த்தார். மற்றபடி ஒன்றிய அரசின் உலகமய நடவடிக்கைகளுக்கெல்லாம் கையை தூக்குபவர்தான். தமிழ்நாட்டில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரே சன் தனியார் மயம் வரும் போது இடதுசாரிகள் மட்டுமின்றி எல்லோரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டி வந்தது. வங்கி இணைப்பு எனும் போது அன்றைய முதல்வர் கலைஞர் ஐ. ஓ. பி இணைப்பு கூடாது, அது “தமிழ் வங்கி” என்றார்.
இப்போது விசாகப்பட்டினம் உருக்காலை பிரச்ச னையில் அரசியல் களத்தில் கீரியும், பாம்புமாக உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் இரண்டும் சேர்ந்து கை கோர்க்கின்றன. இதற்கு காரணம் மக்களை இணைக்கிற மொழி உணர்வுகள். ஆந்திரா உடைந்த பிறகும் எதிர்ப்பு எழுகிறது. உடையாமல் இருந்தால் இன்னும் அதிகமாக எதிர்ப்பு இருந்திருக்கும். ஆகவே பலவீனமான மாநிலங்கள் உலக மயத்திற்கு தேவை. மத வெறி அடிப்படையில் மக்களை திரட்ட நினைக்கும் இந்துத்துவா அரசியலுக்கு மொழி வழி மக்கள் ஒன்றுபட்டு இருப்பது ஒரு தடை. ஆகவே பா.ஜ.கவுக்கு மொழி வாரி மாநிலங்கள் என்றாலே கசக்கிறது. ஆகவே நயினார் நாகேந்திரன் கருத்து வெறும் பரபரப்பு பேச்சு அல்ல. அவர்களின் ஆழ்ந்த விருப்பத்தின் வெளிப்பாடே. கார்ப்பரேட் - இந்துத்துவா கூட்டணி கை கோர்க்கும் இடம் அது.