கியூபாவில் உருவாக்கப்பட்ட கொரோனா எதிர்ப்பு மருந்தான அப்தாலாவுக்கு விரைவில் உலக சுகாதாரக் கழகத்தின் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மருந்தின் தரம், பாதுகாப்பு மற்றும் திறன் ஆகியவை பற்றி செப்டம்பர் 2021ல் கழகத்தின் வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்டது. வேறு சில காரணங்களால் ஒப்புதல் கிடைக்க தாமதம் ஆகி விட்டது என்றும், விரைவில் கிடைத்துவிடும் என்றும் அப்தாலா தடுப்பூசி மருந்தைத் தயாரித்த கியூப நிறுவனமான பயோ கியூப பார்மாவின் தலைவர் எட்வர்டோ மார்ட்டினஸ் கூறியுள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஈரான் மேற்கொண்டு வரும் எண்ணெய் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் 107 விழுக்காடு அதிகரிப்பு என்று ஈரானின் வர்த்தகத்துறையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் கச்சா இரும்பு. உரங்கள் உள்ளிட்டவை அடங்கும். கானா, தென் ஆப்பிரிக்கா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் ஈரானிலிருந்து இறக்குமதி செய்வதில் முன்னணியில் உள்ளன.
அடுத்த நான்கு ஆண்டுகளில் ராணுவத்திற்கான செலவை அதிகரிக்கப்போவதாக எஸ்டோனியா அறிவித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் இவாமாரியா லிமெட்ஸ் இதைத் தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னாலினா பியர்போக்கைச் சந்தித்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். தற்போது தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 விழுக்காட்டை எஸ்டோனியா செலவழித்து வருகிறது.