டெல் அவிவ், ஏப். 25- இஸ்ரேலின் சட்ட விரோத சிறைக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை இரண்டு பாலஸ்தீனக் கைதிகள் தொடர்கிறார்கள். ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். எவ்வளவு நாட்கள் அவர்கள் சிறையில் இருப்பார்கள் என்பது கைதிகளுக்குத் தெரியாது. அவர்கள் தொடர்பான விபரங்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன. நியாயமான முறையில் விசாரணைகள் நடப்பதில்லை. இவற்றிற்கு எதிரான போராட்டங்கள் நடக்கின்றன. தற்போது காலில் அவாதே மற்றும் ரயீத் ரய்யான் ஆகிய இரண்டு கைதிகள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். ரகசிய கோப்பு களின் அடிப்படையில் சிறைகளில் அடைக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிவருகிறார்கள்.
காலியான கப்பல்தான்
டுனீஸ், ஏப். 25 - துனீசியாவுக்கு அருகில் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பலில் அந்த சமயத்தில் எண்ணெய் இருப்பு இல்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த விபத்து நடக்கையில் அந்தக் கப்பலில் 750 டன் டீசல் இருந்ததாகச் சொல்லப்பட்டது. எகிப்தில் இருந்து மால்டா சென்று கொண்டிருந்த இந்தக் கப்பல் துனீசியாவின் கடற்பகுதியில் மூழ்கியது. மூழ்கிய கப்பலை ஆய்வு செய்து துனீசிய அதிகாரிகள், “அந்தக் கப்பலில் டீசல் இல்லை. காலியாகவே இருந்தது” என்று கூறியுள்ளனர். இதனால் பெரிய அளவில் மாசு உருவாகிவிடும் என்ற அச்சம் தேவையில்லை என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
பிணக்குவியல்
பமாகோ, ஏப். 25 - முன்பு பிரான்ஸ் படைகள் அமைத்திருந்த முகாமின் அருகில் பிணக்குவியல் இருந்ததற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். அண்மையில் இந்த முகாம் மீண்டும் மாலி அரசிடம் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த முகாமை புதுப்பிக்க மாலி படைகள் முயற்சித்தபோதுதான் ஏராளமான உடல்கள் புதைக்கப்பட்ட இடம் அந்த முகாமிற்கு அருகில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாலியில் பிரான்ஸ் படை களுக்கு தொடர்ந்து எதிர்ப்பு வரும் நிலையில் அங்கிருந்து வெளியேற முடிவெடுத்திருக்கிறார்கள். அதை நடைமுறை படுத்தி வரும் வேளையில் இந்தப் பிணக்குவியல் கிடைத்திருக்கிறது.
உதவத் தயார்
டெஹ்ரான், ஏப். 25- ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான மற்றும் மருத்துவ ரீதியான உதவிகளைச் செய்யத் தயார் என்று ஈரான் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் மற்றும் மசர் இ ஷரீப் ஆகிய நகரங்களில் சில நாட்களுக்கு முன்பாக பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. பிரதேச அமைதியைக் குலைக்கும் வகையில் நடத்தப் படும் இது போன்ற பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டிப்ப தாக ஈரானின் உள்துறை அமைச்சர் பஹ்ரம் இனோலாஹி தெரிவித்துள்ளார்.