states

img

சோக்கோ அறக்கட்டளை இயக்குனர் மகபூப் பாஷா மறைவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு: மதுரையை  தலைமை யிடமாக வைத்து செயல் பட்டு வந்த சோக்கோ அறக் கட்டளையின் மேலாண்மை அறங்காவலர்  மனிதநேயப் பற்றாளர் திரு. மகபூப் பாஷா அவர்கள், உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை அடைந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது அவருக்கு வயது 64.   மகபூப் பாஷா அவர்கள், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகளான வி.ஆர் கிருஷ்ணய்யர், பி. என். பகவதி, சிவராஜ் பாட்டீல், கபீர் போன்ற நீதி துறையின் மாண்புகளை உயர்த்திப் பிடித்த ஆளுமைகளின் பெயர்களில் சட்டப் பணிகளையும்,கல்வி உதவிப் பணிகளையும் இடையறாது  மேற்கொண்டு வந்தவர். தமிழ்நாட்டில் கொடைக்கானல், இளை யான்குடி,தென்காசி,நாமக்கல் உட்பட பல்வேறு இடங்களில் கொத்தடிமைகளை மீட்பதிலும், அவர் களுக்கு மறுவாழ்வு வழங்குவதிலும் மிகச் சிறந்த பங்களிப்பு செய்தவர். பொதுமக்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும் பயன் அளிக்கக்கூடிய விதத்தில் மனித உரிமைகள் சார்ந்த எண்ணற்ற நூல்களை சோக்கோ அறக்கட்ட ளை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சோக்கோ அறக்கட்டளையின் சார்பில் மாநிலம் முழுவதும்  நூற்றுக்கணக்கான மாணவ,மாணவியர்களுக்கு சட்டப் பயிற்சிகள் நடத்தப்பட்டு வந்தது.அதே போல்  எண்ணற்ற  செயற்பாட்டாளர்களுக்கு வி.ஆர்.கிருஷ்ண ய்யர் உள்பட பல ஆளுமைகளின் பெயர்களில் விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தியும் வந்துள்ளது.  படுகொலை செய்யப்பட்ட மேலவளவு முருகேசனின் குழந்தைகள் உள்பட தமிழ்நாட்டில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களது குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்கு சோக்கோ  அறக்கட்டளை உதவி வந்துள்ளது  குறிப்பிடத்தக்கதாகும். பொருளாதார நெருக்கடியில் இருக்கிற சட்டக் கல்லூரி மாணவர்கள்,வழக்கறிஞர் தொழிலை துவங்கும் நிலையில் இருக்கிற மிகச் சாதாரண குடும்பங்களை சார்ந்த இளம் வழக்கறிஞர்கள் ஆகி யோர்களுக்கு சோக்கோ அறக்கட்டளை உதவிகளைச் செய்து வந்துள்ளது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து திறம்பட செயல்படுத்தியவர் மகபூப் பாஷா. நீதிபதி  பி.என்.பகவதி அவர்களுடைய பெயரிலே விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் பளியர் பழங்குடி மக்களுக்கான சிறப்பு பள்ளியை துவங்கி அதை இன்று வரை நடத்தி வருகிறவர். மகபூப் பாஷா அவர்கள், இடதுசாரி இயக்கத்தின்  மீது மிகுந்த ஈடுபாட்டையும் மரியாதையையும் வைத்திருந்தவர். இடது சாரிக் கோட்பாடுகளின் மீது நம்பிக்கையையும் வைத்திருந்தவர். மகபூப் பாஷா அவர்களுடைய மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ்நாடு மாநில  செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்கு கிறது. அவருடைய குடும்பத்தாருக்கும் சோக்கோ அறக்கட்டளை ஊழியர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவர் விட்டுச் சென்ற பணியினை சோக்கோ அறக்கட்டளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் அப்பணி களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உறுதுணை யாக இருக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறது.