states

img

பட்டாசு ஆலை விபத்து: பலியானோருக்கு முதல்வர் நிவாரணம்

கடலூர்,ஜூன் 23- கடலூர் அருகே பட்டாசு  தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் பலியான மூன்று தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். கடலூர் அருகே எம்.புதூரில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு வியாழனன்று(ஜூன் 23) காலை வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத வேளையில் பலத்த சத்தத்துடன் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நாட்டு பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த சி.என் பாளையம் கிராமத்தை சேர்ந்த சத்யராஜ் (34), நெல்லிகுப்பத்தை சேர்ந்த அம்பிகா (50), பெரியகாரைகாடு கிராமத்தை சேர்ந்த சித்திரா (35) ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் பெண் உள்ளிட்ட இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். மேலும், இதே விபத்தில் காயமடைந்த நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தாவுக்கு கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை வழங்க உத்தரவிட்டிருக்கிறார். ஆறுதல் வெடிவிபத்து நடந்த இடத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் எம்.மருதவாணன், ஆர்.அமர்நாத்,  ஆர்.ஆளவந்தார், எஸ்.கே. பக்கீரான் ஆகியோர் பார்வையிட்டனர். பிறகு, இந்த சம்பவத்தில் பலியானவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.