சென்னை, செப். 1- அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006 - 2011ஆம் ஆண்டுகளில், கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது, செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு சுமார் ரூ. 28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது 2012ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட மத்திய குற்றப் பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அதனை அடிப்படையாக கொண்டு அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்களும், ரூ. 13 லட்ச மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட் உட்பட ரூ. 81 லட்சத்து 70 ஆயிரமும் பறி முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டு உள்ளதா கவும் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது. இந்த சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கவுதம சிகா மணி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டாவது சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 11ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.