உத்தவ் தாக்கரேவை வெளிப்படையாக மிரட்டும் பாஜக
“எங்கள் தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்தா விட்டால், பாஜகவினர் உங்கள் ஆடைகளை கிழித்துவிடுவார்கள்.பிறகு உங்களது “பெங்குயின் குழந்தை” ஆதித்யா தாக்கரே விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்” என மகாராஷ்டிர பாஜக தலைவர் நிதேஷ் ரானே சிவசேனா (யுடிபி) தலைவர் உத்தவ் தாக்கரேவை மிரட்டியுள்ளார்.
ஒடிசாவில் பதற்றத்தை ஏற்படுத்திய “விவேக் எக்ஸ்பிரஸ்”
அசாமின் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த “விவேக் எக்ஸ்பிரஸ்” ரயில் ஒடிசா வின் பிராமபுர் அருகே வரும் போது திடீரென புகை கிளம்பியதால் நிறுத்தப்பட்டது. பின்னர் என்னவென்று சோதனை செய்த பொழுது ரயிலின் பிரேக் அமைப்பில் சாக்கு மூட்டை சிக்கியதால் புகை கிளம்பியது தெரியவர 15 -30 நிமிடங்களில் சரி செய்யப்பட்டு ரயில் கிளம்பியது. ஏற்கெனவே இதே ஒடிஷா மாநிலத்தில் 3 ரயில்கள் மோதியதில் 292 பேர் உயரிழந்த நிலையில், “விவேக் எக்ஸ்பிரஸ்” புகையோடு நின்றதால் பயணிகள் ஒருவித பதற்றத்துடன் ரயிலை விட்டு வெளியேறினர்.
வெளியுறவுத்துறை அமைச்சரின் சொத்து மதிப்பு 30% அதிகரிப்பு
ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மனைவி கியோகோ ஆகியோரின் மொத்த சொத்து கடந்த 4 ஆண்டுகளில், அதாவது 2019 முதல் 29.4 சதவீதம் அதிகரித்துள்ளது. தில்லியில் இரண்டு வீடுகள் மற்றும் சிம்லாவில் விவசாய நிலம் உட்பட ரூ .20.09 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும், நகைகள் மற்றும் வெளிநாட்டு வைப்புகளின் மதிப்பும் அதிகரித்துள்ளதாக குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான பிரமாணப் பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், ஸ்மிருதி இரானியை தண்டிக்க வேண்டும்
மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் இருந்து மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை காப்பாற்றிய ஒன்றிய பாஜக அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், ஸ்மிருதி இரானி ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும். பெண்கள் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தனது அரசியலமைப்புப் பொறுப்பை ஸ்மிருதி இரானி முற்றிலும் புறக்கணித்ததற்காக வெட்கப்படவேண்டும்” என சிவசேனா (உத்தவ்) எம்பி பிரியங்கா சதுர்வேதி கூறினார்.
பிளவுக்குப் பிறகு சரத் பவார் மேலும் வலுவாகிவிட்டார்
“தேசியவாத காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு சரத் பவார் பலவீனமடையவில்லை. பிளவுக்குப் பிறகுதான் சரத் பவார் மேலும் வலுவாகிவிட்டார். மகாராஷ்டிராவில் உள்ள மக்கள் இந்த வகையான (கட்சி தாவி ஆட்சியை கலைப்பது) செயல்பாடுகளை விரும்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன்” என ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்
சென்னை,ஜூலை 11- அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் புதிய நிர்வாகிகளின் பெயர்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனி சாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் இபிஎஸ் தரப்பு அளித்த ஆவணங்களை ஏற்று அவரை பொதுச் செயலாளராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது. அதேபோல், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவா சன் உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
உலகச் செய்திகள்
ரஷ்யாவைத் தோற்கடிக்கும் முயற்சியில் உக்ரைனைப் பலிகடாவாக ஆக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணி முயற்சிப்பதாக ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர் செவிம் டாக்டெலீன் குற்றம் சாட்டியுள்ளார். இடதுசாரிக்கட்சியின் நாடாளுமன்றக்குழுவின் தலைவராக இவர் பொறுப்பு வகிக்கிறார்.
எல்சால்வடாரின் தற்போதைய ஜனாதிபதி நயீப் புகேலே மீண்டும் தேர்தலில் நிற்கப் போவதாக அறிவித்திருக்கிறார். ஒருமுறை ஜனாதிபதி பொறுப்பை வகித்தவர் மீண்டும் நிற்பதற்கு அனுமதி இல்லை என்ற நிலை அந்நாட்டில் இருந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் அந்நாட்டின் உச்சநீதிமன்றம் அத்தகைய தடை இல்லை என்று கூறியதால், 2024 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தேர்தலில் மீண்டும் போட்டியிடவிருக்கிறார்.
தனது தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணியில் ஸ்வீடன் சேருவதற்கு ஆதரவு தெரிவித்தால், ராணுவத்தை நவீனப்படுத்த உதவுவோம் என்று துருக்கிக்கு அமெரிக்கா ஆசை வார்த்தை காட்டியுள்ளது. நேட்டோ நாடுகளில் துருக்கி மட்டும் ஸ்வீடனை சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. துருக்கியின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யாசர் குலெருடன் தொலைபேசியில் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் பேசியுள்ளார்.