states

9 ஆண்டில் 141 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்!

புதுதில்லி, நவ. 3 - 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே, நாடாளுமன்ற ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத தாக்குதலைச் சந்தித்து வருகிறது. எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கேள்விக்கு பிரத மர் பதிலளிப்பதில்லை, அவர் நாடாளுமன்றத் திற்கே வருவதில்லை. இதுதொடர்பாக எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பி போராட்டம் நடத்தி னால், அவர்கள் அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்படும் அராஜகங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில்தான், கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் 141 எதிர்க்கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் இலவா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்க விவகாரம் தரவை கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதற்கு அளிக்கப்பட்ட பதிலில்தான், நாடா ளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்க விஷ யத்தில், கடந்த 67 ஆண்டுகளில் இல்லாத அள விற்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் குரல்  வளையை நெரித்து, வெறும் 9 ஆண்டுகளில் 141 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் அமர்ந்தார். அன்று முதல் தற்போது வரை, கடந்த 9 ஆண்டுகளில் 141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மக்களவை - 98, மாநிலங்களவை 48) இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.  இதில், நீக்கப்பட்டவர்கள் அனைவருமே எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் நாடாளுமன்ற உறுப் பினர்களின் எண்ணிக்கையில் 17.85 சதவிகிதம் பேர்கள் ஆவர்.

பாஜக எம்.பி. ஒருவர் கூட சஸ்பெண்ட் செய்யப்படவில்லை

மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு 192  எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 98 எதிர்க் கட்சி எம்.பி.க்களும், இரு அவைகளிலும் மொத்தம் 290 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளில் 290 எம்பிக்களில் 141 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன் சதவீதம் 48.62 சதவிகிதம் என்பது தீவிர மான விஷயம் ஆகும். அதாவது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சரிபாதி பேர்களை மோடி அரசு இடைநீக்கம் செய்துள்ளது. அதேநேரம், 353 எம்பிகளை கொண்ட பாஜக- வினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தும் ஒருவர் கூட இடைநீக்கம் செய்யப்படவில்லை.  மேலும் இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது 324ஏ, 252, 254,  255, 257, 259, 260 ஆகிய அரசியல் சாசன சட்டப் பிரிவுகளின் கீழ்  நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. 

மன்மோகன் சிங் ஆட்சியில்  45 பேர் மீதே நடவடிக்கை

கடந்த 2004 முதல் 2014ஆம் ஆண்டு வரை மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் மொத்தமே 45 நாடாளு மன்ற உறுப்பினர்கள் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களிலும் 25 எம்.பி.க்கள் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வர்கள். அதுவும் மக்களவை, மாநிலங்களவை யில் அவை நடவடிக்கைகளுக்கு எதிராக செயல் படும் எம்.பி.க்கள் மீது மட்டுமே இடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் ஒரு பாஜக எம்.பி.யைக் கூட இடைநீக்கம் செய்ய வில்லை. ஆனால் தற்போது ஒன்றிய மோடி அரசு  ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு கடந்த 9 ஆண்டுகளில், 54 காங்கிரஸ் எம்.பி.க்கள் உட்பட மொத்தம் 141 எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்துள்ளது.

மக்களவையில் அதிகபட்சமாக இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள்: 

காங்கிரஸ் - 43; அதிமுக - 34; தெலுங்கு தேசம் கட்சி - 14; (மற்ற கட்சிகளில் ஒரே ஒரு எம்பி மட்டும் தகுதி நீக்க நடவடிக்கைக்கு உள்ளாகினர்)

மாநிலங்களவையில் அதிகபட்சமாக இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள்:

திரிணாமுல் காங்கிரஸ் - 14; காங்கிரஸ் - 11; ஆம் ஆத்மி - 6; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 5 ; திமுக - 5; பிஆர்எஸ் - 3; இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி - 2; சிவசேனா (யுடிபி) - 2.