states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 30 வரை தடை!

ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு விதிமுறைகளை மீறி 263 சீனர்களுக்கு விசா வழங்கி யதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அவருக்குத் தொடர்புடைய  10 இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தியது. இதன்பிறகு, அவரது ஆடிட்டர் பாஸ்கரராமனை  கைது செய்து காவலில் வைத்தது. வியாழனன்று கார்த்தி சிதம்பரத்தையும் நேரில் வரவழைத்து, தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணை நடத்தியது. அப்போதுஅவர் கைது செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. இதனிடையே, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய  மே 30-ஆம் தேதி வரை தடை விதித்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி துணைநிலை ஆளுநராக சக்சேனா பொறுப்பேற்றார்!

தில்லியின் துணைநிலை ஆளுநராக இருந்த அனில் பைஜால், கடந்த வாரம் ராஜினாமா செய்த தைத் தொடர்ந்து, புதிய துணைநிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனாவை நியமித்து குடியரசுத் தலைவர் மாளிகை கடந்த திங்கட்கிழமையன்று அறிவிக்கை வெளியிட்டது. இதை யடுத்து, வினய்குமார் சக்சேனா தில்லி துணைநிலை ஆளுநராக வியாழனன்று பொறுப்பேற்றுக் கொண்டார். வினய்குமார் சக்சேனா இதற்கு முன்பு, காதி கிராமத் தொழில் ஆணையத்தின் தலை வராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

10-ம் வகுப்பு அறிவியல் தேர்வு: 44,822 பேர் எழுதவில்லை!

வியாழனன்று நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அறிவியல் தேர்வை 44 ஆயிரத்து 822 பேர் எழுத வில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த 10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வை 45 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதவில்லை. இந்நிலையில் அறிவியல் தேர்வையும் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதாதது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5-ஆம் தேதியும் தொடங்கி  நடைபெற்று வருகின்றன.

அருணாச்சலில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

அருணாச்சலப்பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் வியாழனன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி இருக்கிறது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. தவாங் பகுதியில் இருந்து வடக்கே 506 கிலோ மீட்டர் தொலைவில் தரைப்பகுதியிலிருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மதியம் 1.18 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

முதல் பெண் போர் விமானி அபிலாஷா பொறுப்பேற்றார்

பிரிட்டிஷ் ராணுவத்தின் ராயல் விமானப் படை, இந்திய ராணுவ வான் பாதுகாப்புப் பிரிவை 1942ஆம் ஆண்டு துவக்கியது. முதல் போர் விமானம் 1947 ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கியது. இந்திய ராணுவத்துக்கென சிறப்பு வான் பாதுகாப்புப் படை 1986-ஆம் ஆண்டு துவங்கியது. அதிலிருந்து இப்போதுவரை போர் விமானியாக பெண்கள் நியமிக்கப்பட்டதில்லை. இந்நிலையில், இந்தியாவின் முதல் பெண் போர் விமானியாக 2022 மே 25 அன்று கேப்டன் அபிலாஷா பாரக் நியமிக்கப்பட்டார். அவர் வியாழனன்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஹரி யானா மாநிலத்தைச் சேர்ந்த அபிலாஷா பாரக், ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி கர்னல் எஸ். ஓம் சிங்கின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

3 எம்.பி., 7 எம்எல்ஏ தொகுதிகளுக்கு ஜூன் 23-ல் தேர்தல்

ஆறு மாநிலங்களில் 3 மக்களவை, 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 23-இல்  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் முறையே ஆசம்கார், ராம்பூர் மக்களவைத் தொகுதிகள், பஞ்சாப்பில் சாங்க்ரூர் மக்களவைத் தொகுதி ஆகியவற்றுக்கும், ஜார்க்கண்டில் மந்தர், ஆந்திரத்தில் ஆத்மகூர், திரிபுராவில் அகர்தலா, டவுன் போர்டோவலி, சுர்மா,  ஜுபராஜ்நகர், தில்லியில் ராஜிந்தர் நகர் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் ஜூன் 23-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் விற்றுமுதல் ரூ.15,044 கோடி!

பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் (BEL) 2021-22 ஆம் ஆண்டுக்கான விற்று முதல் ரூ.15 ஆயிரத்து 44 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 8.87 சதவிகிதம் உயர்வாகும். அதேபோல, வரிக்கு முந்தைய  லாபம் ரூ.3,158 கோடியாக இருந்தது. இது 7.60 சதவிகித வளர்ச்சியாகும். வரிக்கு பிந்தைய லாபம்  ரூ.2 ஆயிரத்து 349 கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 13.73 சதவிகித வளர்ச்சியாகும். இத்தகவலை நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராமலிங்கம் வெளியிட்டுள்ளார்.

பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும்!

“கொரோனாவிற்குப் பின் மீட்சிப் பாதைக்குத் திரும்பிக் கொண்டிருந்த பொருளாதார வளர்ச்சிக்கு, உக்ரைன் - ரஷ்ய போர் பெரும் பின்னடைவாக உள்ளது. உலகளாவிய  வளர்ச்சி விகிதம் ஒரு தீவிரமான சரிவைக் கண்டுள்ளது. வாழ்க்கைச் செலவு நெருக்கடி அதிக ரித்துள்ளது. உலகம் முழுவதும் எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்களின் விலைகள்  அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக, வளர்ந்த நாடுகள் 2024-இல் தொற்றுநோய் இல்லாத நிலையில் இருந்த இடத்திற்குத் திரும்பும். ஆனால் வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகள் தொற்றுநோய் இல்லாத நிலையில் இருந்ததை விட 5 சதவிகிதம் குறைவான வளர்ச்சியையே பெறும்” என்று ஐஎம்எப் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வேண்டும்!

“இடஒதுக்கீடு காரணங்களுக்காக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகையை துல்லியமாக அறிய வேண்டியுள்ளது. எனவே சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் தேவை. இந்த கணக்கெடுப்பின் புள்ளிவிவர அடிப்படையில் தான் சமூக நீதி வழங்க முடியும்” என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். “ஆர்எஸ்எஸ் மூத்த  தலைவர் பையாஜி ஜோஷி சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை எதிர்க்கிறார். அது சமூகத்திற்கு தவறான செய்தியை கொண்டு சேர்க்கும் என்கிறார். நாட்டின் சரியான காட்சியை வெளிக்கொண்டு வருவதில் என்ன தவறு இருக்கிறது?” என்றும் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாங்களும் காங்கிரஸ் சித்தாந்தத்தையே பின்பற்றுகிறோம்

ஒன்றிய முன்னாள் அமைச்சர் கபில் சிபல், காங்கிரசிலிருந்து விலகி, உ.பி. மாநிலங்கள வைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு  தெரிவித்துள்ளது. இதனிடையே, காங்கிரசிலிருந்து விலகியது குறித்து கபில் சிபல் பேட்டிய ளித்துள்ளார். அதில், “நாங்களும் ‘அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா’ (சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்) எனும் காங்கிரஸ் சித்தாந்தத்தையே பின்பற்றுகிறோம். ஒட்டுமொத்த எதிர்க்கட்சி களின் சித்தாந்தம் இது. இதன் அடிப்படையிலேயே நாங்கள் முன்னோக்கிச் செல்ல இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.