புதுதில்லி, ஜூன் 29 - எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் ஜூலை 13, 14 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார். முன்னதாக இந்தக் கூட்டம், இமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தக் கூட்டம், கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் வகையிலும், 2024 தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக ஆலோசிக்கவும், ஜூன் 23 அன்று அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம், பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சுப்ரியா சுலே, பிரபுல் படேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேசியச் செயலாளர் து. ராஜா, திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு எம்.பி., திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி, டெரிக் ஓ பிரைன் எம்.பி., ராஷ்ட்ரிய ஜனதாதளம் சார்பில் லாலு பிரசாத், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் என 17 கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில், பாஜக-வைத் தோற்கடிக்கும் வகையில், 2024 மக்களவைத் தேர்தலை, 17 எதிர்க்கட்சிகள் கூட்டாக சந்திப்பதெனவும், இதுதொடர்பாக பொதுவான செயல்திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக அடுத்த கட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படியே தற்போது எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம், ஜூலை 13, 14 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.