states

img

அண்ணாமலையின் அருவெறுப்பு அரசியல்: கே.எஸ்.அழகிரி சாடல்

சென்னை, அக்.20- “மக்களவைத் தேர்தலில் இந்தியாவில் ஒரு மாநிலத்தில் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் டெபாசிட் இழந்து  அண்ணாமலையின் அருவெறுப்பு அரசியலால் தமிழ்நாடு பாஜக மிகப்பெரிய விலையை தரப்போவது காலத்தின் கட்டாயமாகும்”என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாஜகவில் சேர்ந்தவுடனே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியடைந்து பிறகு தமிழ்நாடு பாஜக தலைவராக பதவி  உயர்வு பெற்ற அண்ணாமலை பொறுப் பேற்றது முதற்கொண்டு நாள்தோறும் அடாவடித்தனமான அதிரடி பேச்சுகள் ஊடக வெளிச்சம் பெற்று மிகப்பெரிய தலைவராக முடியும் என்று கனவு கண்டு செயல்பட்டு வருகிறார்.  ஆனால், செய்தியாளர்கள் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்வி களை சகித்துக் கொள்ளாமல் கேவலப் படுத்துவது, களங்கப்படுத்தும் அராஜக போக்கை கடைப்பிடித்து வருவதால் ஊடகங்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறார்.  அடிப்படையில் தான்தோன்றித்தனமாக செயல்படும் இவருக்கு மூத்த பாஜக தலைவர்கள் யாருமே ஆதரவாக இல்லை.  இவரைச் சுற்றி இருப்பவர்கள் அனை வரும் சந்தர்ப்ப வாதத்தின் அடிப்படையில் பாஜகவை சேர்ந்தவர்கள் தான். இந்தச் சூழலில் ஒட்டுமொத்த பாஜக எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார் அண்ணாமலை. ஜெயலலிதா, அண்ணா போன்ற தலைவர்களை இழிவுபடுத்திப் பேசினார்.

அதை சகித்துக் கொள்ளாத அதிமுக, பாஜகவோடு எந்த காலத்திலும் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது. கூட்டணியும் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி தெளிவாக அறிவித்து விட்டார்.  அதற்குப் பிறகு அண்ணாமலை தில்லிக்கு அழைக்கப்பட்டு, இனி அதிமுக வுக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது என்று வாய் பூட்டு போடப்பட்டது. அதற்கு  பிறகு பல் பிடுங்கிய பாம்பாக, பியூஸ் போன பல்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை ஏதாவது ஒரு வழக்கில் சிக்க  வைக்க அண்ணாமலையின் பரிந்துரையின் பேரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா  தீட்டிய சதித் திட்டம் தான் கைது நடவடிக்கை. இத்தகைய குற்றத்தை கூலிக்கு  கூட்டத்தை சேர்த்து அதிரடி பேச்சுக்களின் மூலம் தாம் ஒரு தலைவராக முடியும் என்று பகல் கனவு காண்கிறார் அண்ணாமலை.       இவருக்குச் சட்டம் தண்டனை வழங்குகிறதோ இல்லையோ, தமிழ்நாட்டு மக்கள் வருகிற மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காத நிலையை ஏற்படுத்தி உரிய பாடத்தைப் புகட்டுவார்கள் என்பது உறுதி. அண்ணாமலையின் அருவெறுப்பு அரசியலால் தமிழக பாஜக மிகப்பெரிய விலையை தரப்போவது காலத்தின் கட்டாயமாகும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.