states

உதவி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு: போராடியவர்கள் மீது தடியடி

கொல்கத்தா, மார்ச் 7- மேற்கு வங்கத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தில் (WBSSC) புதிய நியமனம்  எதையும் செய்யவில்லை. ஆனால், சட்ட விரோதமாக உதவி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றம் மத்திய புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளது.  முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஆறு உதவி ஆசிரியர்களின் நியமனத்தை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது, பணி நியமன ரத்து குறித்து கூறியுள்ள நீதிமன்றம் “மேற்கு வங்க பள்ளி சேவை  ஆணையத்தின் சட்டவிரோதப் பரிந்துரையின் அடிப்படையில் ஆறு உதவி ஆசிரியர்கள் சட்டவிரோதமாக நியமனம் செய்யப்பட்ட தாக” கூறியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது.  இதையடுத்து வேலைகேட்டு பள்ளி சேவை ஆணையத்திற்கு விண்ணப்பித்தோர், வேலை தேடுவோர்  பேரணி-ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் கொல்கத்தா காவல்துறை ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி, போராட்டக்காரர்களை தாக்கி கைது செய்தனர். காவல்துறையின்  அட்டூழியத்தை மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. போராடியவர் களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.