தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: பாரதி, பாரதிதாசன், பெரியார், ஜீவா ஆகியோரின் கருத்தியல்களால் ஈர்க்கப்பட்டு கலை இலக்கியத்தளத்திலும் அரசியலிலும் தீவிரமாக பங்காற்றியவர் கவிஞர் தமிழ் ஒளி. தூக்குக்கயிற்றினைத் தொட்டிழுத்தாலும் துளியும் அஞ்சாதே! ஒளியிலா நாட்டில் ஒளியினைப் பாய்ச்சு” என்று அநீதிகளுக்கெதிராக போராடத் தூண்டிய தமிழ்ஒளியை தனது ஐம்பெரும் ஆளுமைகளில் ஒருவராக ஏற்றுக்கொண்டுள்ள தமுஎகச, தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழாவினை நூறு இடங்களில் நடத்துகிறது. கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழுவும் பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்துவருகிறது. இதன் தொடர்ச்சியில்தான் தமிழ் ஒளியின் நூற்றாண்டை அரசு விழாவாக நடத்தவேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்தது. இப்போது தமிழ்நாடு அரசு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ஒளியின் மார்பளவு சிலையினை அமைக்க முன்வந்துள்ளது. மேலும், பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்க ரூ.50 இலட்சம் வைப்புத்தொகையாக வைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழ்ச்சமூகத்திற்கு கலை இலக்கியம் வழியே மதிப்பார்ந்த பங்களிப்பினைச் செய்துள்ள கவிஞர் தமிழ் ஒளி அவர்களைப் போற்றும் விதமாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இவ்வறிவிப்பினை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வரவேற்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.