மனாகுவா, ஜூன் 15- ஈரானும், நிகரகுவாவும் பொது எதிரிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றன என்று ஈரானின் ஜனாதிபதி இப்ராகித் ரெய்சி தெரிவித்துள்ளார். வெனிசுலா, நிகரகுவா மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கு ஈரான் ஜனாதிபதி பயணம் மேற்கொண்டுள்ளார். புதிய உலகத்தை உருவாக்குவதிலும், அமெரிக்காவின் மேலாதிக்கத்தைக் குறைப்பதிலும் மக்களின் போராட்டங்களுக்கு முக்கியமான பங்குள்ளது என்று கூறிய ரெய்சி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட தென் அமெரிக்க அரசுகளுக்கு எதிராகவே அமெரிக்கா எப்போதும் இருந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டினார். இளைஞர்களின் மனங்களில் அதீதமான உணர்வுகளை விதைத்து, சுதந்திரமாக இயங்கும் நாடுகளின் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள் என்று தெரிவித்த ரெய்சி, இத்தகைய உணர்வுகளை ஏற்படுத்த அல்லது தூண்டுவதற்கு சர்வதேச ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். சுதந்திர நாடுகள் தனது பொது எதிரிக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும். நிகரகுவாவுடனான பேச்சுவார்த்தையில் இதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்றார். நிகரகுவாவின் தலைநகர் மனாகுவாவிற்கு வந்த இப்ராகிம் ரெய்சியை, அந்நாட்டின் ஜனாதிபதி டேனியல் ஓர்டேகா மற்றும் துணை ஜனாதிபதி ரொசாரியோ முரில்லோ ஆகியோர் வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய ஓர்டேகா, “நிகரகுவா மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளிலும் ஒரே ஆண்டில்(1979) ஆட்சிகள் மாறின. மக்களின் நலன்களுக்கான நிரந்தரப் போராட்டமாக அவை மாறியுள்ளன” என்று குறிப்பிட்டார்.