states

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ. 1031கோடி ஒதுக்கீடு: சிபிஎம் வரவேற்பு

சென்னை,மார்ச் 31- ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ. 1031 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. 7 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமலிருக்கும் அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கக் கோரி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மார்ச் 31 வெள்ளியன்று கடிதம் எழுதியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:  தங்களை 7.1.2023 அன்று நேரடியாக சந்தித்து போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதியப் பலன்கள் மற்றும் பஞ்சப்படி நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.  விருப்ப ஓய்வுபெற்ற, பணியின்போது மரணமடைந்த ஊழியர்களுக்கு பணிக்கால பலன்களை வழங்கியமைக்கும், 30.03.2023 அன்று சட்டமன்றத்தில் 2022 நவம்பர் மாதம் வரை ஓய்வுபெற்றவர்களுக்கு அனைத்து ஓய்வூதிய பலன்களையும் அளிக்க ரூ.1,031 கோடி வழங்கப்படும் என்ற தங்களது அறிவிப்பை வரவேற்பதோடு, நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆயிரக்கணக்கான ஓய்வூதியர் குடும்பங்களுக்கும் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், 87 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கொடுக்கப்படாமல் அதன்பின்னரும் தொடரும் 90 மாதங்களுக்கான பஞ்சப்படியை வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். முதலமைச்சர் ஓய்வூதியப் பலன்களை போலவே, பஞ்சப்படி நிலுவைக்கான அறிவிப்பையும் இந்த கூட்டத் தொடரிலேயே அறிவித்து 87 ஆயிரம்  குடும்பங்களின் துயர் துடைக்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;