ஷெர்ம் எல்-ஷேக், நவ.21- காப்27 காலநிலை உச்சிமாநாடு எகிப்தின் ஷெர்ம் எல்-ஷேக் நகரில் நவம்பர் 6 முதல் 20 வரை நடந்துமுடிந்துள்ளது. இம்மாநாட்டில், பேரிடர்களால் ஏழைநாடுகளில் ஏற்படும் சமூக, பொருளாதார இழப்புகளை ஈடுகட்ட, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கெடுதி களுக்கு முக்கியக்காரணமாக இருக்கும் பணக்கார நாடுகள் நிதியுதவி செய்யவேண்டும் என்ற - 1992 முதல் கடந்த முப்பது ஆண்டுகளாக இருந்து வருகிற - கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இது காலநிலை மாற்ற மாநாடுகளின் முடிவுகளில் ஒரு மைல்கல் ஆகும். என்றாலும் இதை நடைமுறைப்படுத்துவதில் பல சவால்கள் உள்ளன. நிதியம் உருவாக்கப்பட வேண்டும்; அதில் பணம் முதலீடு செய்யப்பட வேண்டும்; இதற்கான தொகை எவ்வாறு எங்கிருந்து பெறப்படும் என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும் நஷ்ட ஈடு தருவது என்ற முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று பல நாடுகளும், அமைப்புகளும் வரவேற்றுள்ளன.
ஒன்றுமில்லாததில் இருந்து...
“ஒன்றுமில்லாத நிலையில் இருந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. ஏழை நாடுகளின் குரல் கேட்கப்பட்டது. அதன் எதிரொலியே இது” என்று காப்27 உச்சிமாநாட்டின் தலைவர் மற்றும் எகிப்து வெளியுறவு அமைச்சர் கூறுகிறார். வளர்ந்துவரும் நாடுகளின் பேரழிவுகளின் அடையாளச்சின்னமாக கடந்த செப்டம்பர் 2022ல் பாகிஸ்தானில் நிகழ்ந்த பெருவெள்ளப்பெருக்கு கருதப்படுகிறது. “இது பணக்கார நாடுகள் எங் களைப் போன்ற ஏழை நாடுகளுக்குக் கொடுக்கும் தானமில்லை. எங்கள் வருங்காலத்திற்கான முதலீடே” என்று பாகிஸ்தான் அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான் கூறுகிறார். ஐநா காலநிலை பிரிவுத் தலைவர் சைமன் ஸ்டீல் “இந்த முடிவு சுலபமாக எட்டப்படவில்லை. ஆனால் இது உலகில் காலநிலை பேரிடரால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு பெரி தும் உதவும். ஆனால் நிதியுதவிக்காக தொடர் நட வடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்” என்கிறார்.
‘ஒட்டுமொத்த உலகின் வெற்றி’
“இந்த முடிவு ஒட்டுமொத்த உலகின் வெற்றி. இது புறக்கணிக்கப்பட்டவர்கள் கவனிக்கப்படு கிறார்கள். செவி மடுக்கப்படுகிறார்கள். மதிக்கப்படு கிறார்கள். உரிய அக்கறை செலுத்தப்படுகிறார்கள். ஆனால் இந்த நிதியுதவியை செயல்வடிவம் கொடுக்க 1.5 டிகிரி என்ற இலட்சியம் அவசியம். அப்போதுதான் தொடர்ந்தும் பாதுகாப்புமிக்க, நீதி சமத்துவம் உள்ள உலகைப் படைக்க நம்மால் முடியும்” என்று ஆண்டிகுவா&பார்புடா சூழல் அமைச்சர் மற்றும் சிறிய தீவு நாடுகள் அமைப்பின் தலைவர் சர் மால்வின் ஜோசப் கூறுகிறார். செங்கடல் நகரமான ஷெர்ம் எல்-ஷேக்கில் இருவாரம் நடந்த காப்27 உச்சி மாநாடு பல கருத்து வேறுபாடுகளால், வரையறுக்கப்பட்ட நவம்பர் 18 இரவையும் தாண்டி 36 மணிநேரம் பணக்கார நாடு களுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையில் நிதி யுதவி தொடர்பான கடும் விவாதங்கள் நடந்ததால், நீண்டது. நஷ்ட ஈடு தீர்மானத்திற்கு எல்லா உறுப்பு நாடுகளும் ஒப்புக்கொண்டன. நிதியுதவி என்ற ஒற்றை சொல்லைச் சுற்றியே பேச்சுக்கள்நடந்தன. என்றாலும் 1.5 டிகிரிக்குள் புவி வெப்ப உயர்வைக் குறைத்தல், புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்தல், பழங்கு டியினர் உரிமை, இயற்கை வளப் பாதுகாப்பு, புதைபடிவ ஆற்றலை சார்ந்திருக்கும் பின்தங்கிய நாடுகளுக்கு உதவி போன்ற பலவற்றைப் பற்றி உருப்படியாக எந்த முடிவையும் இம்மாநாடு எடுக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் துணைத்தலைவர் பிரான்ஸ் டிம்மர்மேன்ஸ் “இந்த மாநாடு பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ்வைக் கட்டுப்படுத்துவது குறித்து முன்னேற்றம் காணவில்லை. 1.5 என்ற குறிக்கோளின் மொழி மிக பலவீனமாகவே உள்ளது” என்கிறார்.
காப்27 வெற்றியா? தோல்வியா?
இழப்பீடு நிதியம் அமைப்பது என்ற முடிவைத் தவிர உரிய இலட்சியங்கள் அடையப்படவில்லை என்றே பல நிபுணர்களும் கருதுகின்றனர். கிளாஸ்கோ காப்26 மாநாட்டில் தீர்மானிக்கப் பட்ட 2025ற்குள் புதைபடிவ எரிபொருள் குறைப்பு தொடர்பான உடன்படிக்கை இம்மாநாட்டின் வரைவுத்திட்டத்தில் இடம்பெறவில்லை. கரியின் (கார்பன்) பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்தல் என்ற பொருளும் இறுதி தீர்மானத்தில் இல்லை. தூய ஆற்றல் பற்றிய தீர்மானம் பலவீன மடையச் செய்யப்பட்டுவிட்டது. 1.5 டிகிரி என்ற பொருள் இறுதி வரைவில் உள்ளது என்றாலும் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. படிப்படியான எல்லா புதைபடிவ எரிபொருள் களின் குறைப்பு என்ற இந்தியாவின் முன்மொழிவு எண்ணெய் வள நாடுகளால் தடுக்கப்பட்டது. கரியின் பயன்பாடு பற்றிய கிளாஸ்கோ முடிவும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளது.
1992ல் காலநிலை தொடர்பான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது முதல் இழப்பிற்காக ஏழை நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இழப்பு, சேதங்களுக்கான நஷ்ட ஈடு என்பது (loss&damages) காலநிலை மாற்றத்தினால் நிகழும் அதிதீவிர பேரிடர்களால் சமூக, பொருளா தாரரீதியாக பாதிக்கப்படும் ஏழை நாடுகளுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு நஷ்ட ஈடாக பணக்கார நாடுகள் நிதியுதவி வழங்கு வதைக் குறிக்கிறது. ‘நஷ்ட ஈடு’ தீர்மானத்தை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை ஆரம்பம் முதலே எதிர்த்துவந்தன. இருக்கும் நிதி ஆதாரங்களைக் கொண்டே இதைச் செய்யலாம் என்று வாதாடின. ஆனால் நவம்பர் 18ல் ஐரோப்பிய ஒன்றியம் தன் முடிவை மாற்றிக்கொண்டது. கடைசி யில் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டது. இதன்படி மிக மோசமாக பாதிக்கப்பட்டுவரும் நாடுகளுக்கு முதலில் நிதியுதவி வழங்கப்படும். இது முழு வடிவம் பெற அடுத்த காப்28 மாநாடு நவம்பர் 2023ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும்வரைக் காத்திருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சில நாடுகள் நிதியுதவி செய்ய வாக்குறுதி அளித்துள்ளன. என்றாலும் இப்போது இதற்காக இருக்கும் நிதி மிகக் குறைவே என்று ஐநா கூறுகிறது.
செய்தி தொகுப்பு : சிதம்பரம் இரவிச்சந்திரன்