states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மேகாலயாவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மேகாலயா மாநிலம், துராவில் திங்கட்கிழமை காலை 6.32 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.0 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக தேசிய நில அதிர்வு மையம்  தெரிவித்துள்ளது. மேகாலயா மாநிலம், துராவிலிருந்து கிழக்கு - வடகிழக்கே 43 கிலோமீட்டர் தொலை வில், 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதம், உயிர்ச்சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மம்தா கூட்டத்தில் உத்தவ் பங்கேற்க மாட்டார்!

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பங்கேற்க மாட்டார் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். “ஜூன் 15 அன்று நானும் உத்தவ் தாக்கரேவும் அயோத்தி செல்ல இருக்கிறோம். எனவே, மம்தா ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் உத்தவ் பங்கேற்க மாட்டார். எங்கள் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்” என்று சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.

ஆஜராக அவகாசம் கேட்கிறார் நூபுர் சர்மா!

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா  மீது மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி காவல்நிலையத்தில் ரசா அகாடமியைச் சேர்ந்த பிரதிநிதி ஒரு புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்கு பதிந்த பிவாண்டி காவல்துறை ஜூன்  22-ஆம் தேதி வாக்குமூலம் பதிவு செய்ய ஆஜராகுமாறு நூபுர் சர்மாவிற்கு சம்மன் அனுப்பியது.  இந்நிலையில், ஜூன் 22-ஆம் தேதி வாக்குமூலம் பதிவு செய்ய நான் ஆஜராக முடியாத சூழ்நிலை யில் இருப்பதால், போதுமான கால அவகாசம் வேண்டும் என நூபுர் சர்மா கேட்டுக்கொண்டுள்ளதாக காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

தில்லியில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்!

தில்லியில் அடுத்த 2-3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜீன் 15,16 ஆகிய தேதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கும்; 44 டிகிரி செல்சியல் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது; அதன்பின் அது குறையலாம் என்று வானிலை ஆய்வு  மையம் கூறியுள்ளது. மேலும், வெப்பநிலை அதிகரிப்பினால் அனல் காற்று வீசக்கூடும் என்பதற்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடு - பிரதமர் மோடி ஆலோசனை?

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தில்லி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில்,  8,084 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக சனிக்கிழமை யன்று 8 ஆயிரத்து 329 பேருக்கும், வெள்ளியன்று 8 ஆயிரத்து 582 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி விரைவில் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீமான் இந்து மக்கள் கட்சியில் சேர்ந்து விடுவார்!

“ஒரு காலத்தில் சீமான் பெரியார் கொள்கையை பேசிக்கொண்டிருந்தார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடன் சேர்ந்து கொண்டிருக்கிறார். முதலில் திராவிடம் பேசினார். அடுத்து  பெரியாரிசம் பேசினார். அதன் பின்னர் நாம் தமிழர் என தொடங்கினார். ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாடு எடுத்தார். அதன் பின்னர் முருகன்தான் முப்பாட்டன் என்று சொன்னார். பின்னர் சிவனை ஏற்றுக்கொண்டார். தற்போது கிருஷ்ணரையும் ஏற்றுக்கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஏற்றுக்கொண்டு, இந்து மக்கள் கட்சியிலும் வந்து கலந்து கொள்வார்” என இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் நெல்லையில் பேட்டி அளித்துள்ளார்.

பிரதமர் தனது மவுனத்தை உடைக்க வேண்டும்!

“நமது நாட்டில் வெறுப்புப் பேச்சுகள் மற்றும் இஸ்லாமிய வெறுப்பு சம்பவங்கள் பெருகி வரு வது குறித்து பிரதமர் தனது மவுனத்தை உடைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என நான் நம்புகிறேன்” என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசியுள்ளார். மேலும் “எந்தவொரு தேசமும் முன்னேறவும் வளரவும் சமூக ஒற்றுமை மற்றும் தேசிய நல்லிணக்கம் அவசியம். ஆகையால், அனைவருடனும் இணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை என்ற பெயரில் இதுபோன்ற நடத்தையை நிறுத்துமாறு பிரதமர் பகிரங்கமாக அழைப்பு விடுக்க வேண்டும்” என்றும் சசிதரூர் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலையை புகழ்ந்து பாடிய காயத்ரிக்கு புதிய பதவி!

பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாளன்று அவரை “வருங்கால பிரதமர், வருங்கால முதல்வர், வருங்கால ஒன்றிய அமைச்சர், வருங்கால எம்.பி., வருங்கால எம்எல்ஏ” என்றெல்லாம் பாராட்டிப் புகழ்ந்திருந்தார். இதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. தமிழக பாஜக-வின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவில் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராமை, அண்ணாமலை நியமித்துள்ளார்.

ஜம்முவில் ‘அனுமன் சவுக்’கான அம்பாலா சவுக்! 

காஷ்மீர் தலைநகர் ஜம்முவில் இரு முக்கிய இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான தீர்மானம் ஜம்மு மாநகராட்சி கூட்டத்தில் பாஜக உறுப்பினர் சாரதா குமாரி என்பவரால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் படி ‘ஷேக் நகர்’ என்ற பகுதி ‘சிவ நகர்’ என மாற்றப்பட உள்ளது. ‘அம்பாலா சவுக்’ என்ற பகுதி ‘அனுமன் சவுக்’ என மாற்றப்பட உள்ளது. ஜம்மு மாநகராட்சியில் பாஜக-வுக்கு பெரும்பான்மை உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக துதி, கடல் கடந்து இலங்கைக்கும் சென்றுவிட்டது! 

“இலங்கையின் வடகிழக்கு பகுதியான மன்னாரில் 500 மெ.வா. திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு எந்தவித நடைமுறையும் இல்லாமல் அனுமதி வழங்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி விரும்பு வதாக, இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே கூறினார்” என்று கடந்த வாரம் இலங்கை நாடாளு மன்ற கூட்டுக் குழு விசாரணையின்போது சிலோன் மின்சார வாரிய தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ குற்றம் சாட்டியிருந்தார். இதனைக் குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கி ரஸ் தலைவர் ராகுல் காந்தி “பாஜக-வின் துதி இப்போது கடல் கடந்து இலங்கைக்கும் சென்றுள்ள தையே இது குறிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.