states

தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் 34-வது மாநாடு

திருச்சிராப்பள்ளி, மே 26- தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் ரயில்வேயை ஒட்டு மொத்தமாக விற்கும் நிலையை நிரந்தரமாக நிறுத்திட, ‘‘ரயில்வேயை காப்போம்; தேசத்தை காப்போம்’’ என்ற முழக்கத்துடன் தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் 34-ஆவது மாநாடு திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள ரயில் கல்யாண மண்டபத்தில் தோழர் கே.சங்கரநாராயணன் திடலில் தோழர் என்.தனபால் நினைவரங்கத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (மே 27,28 தேதிகளில்) நடைபெறுகிறது. மாநாட்டின் முதல் நாளான வெள்ளியன்று சிஐடியு தமிழ் மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் தலைமை  வகித்து மாநாட்டு கொடியை ஏற்றி வைக்கிறார். சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ரெங்கராஜன் வரவேற்கிறார். அஞ்சலி தீர்மானத்தை துணை பொதுச்செயலாளர் சாம்பசிவன் வாசிக்கிறார்.  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கவுரையாற்றுகின்றார். டிஆர்இயு பொதுச்செய லாளர் மேத்யூவ்சிரியக் அறிக்கை வாசிக்கிறார். துணை பொதுச்செயலாளர் பேபி ஷகிலா தீர்மானங்களை முன்மொழிகிறார். 

மாநாட்டின் இரண்டாம் நாளான சனிக்கிழமையன்று சங்க அமைப்பு விதிகள் திருத்தம் குறித்து துணைத்தலைவர் இளங்கோவன் பேசுகிறார். பொதுச்செயலாளர் மேத்யூவ்சிரியக் தொகுப்புரையாற்றுகின்றார். வரவு - செலவு குறித்து பொருளாளர் சரவணன் அறிக்கை தாக்கல் செய்கின்றார்.  சிஐடியு தமிழ்மாநில தலைவர் அ.சவுந்தரராசன் வாழ்த்துரை வழங்குகின்றார். எதிர்கால இயக்கங்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து டிஆர்இயு செயல்  தலைவர் ஏ.ஜானகிராமன் பேசுகின்றார். சிஐடியு  தமிழ்மாநில தலைவர் ஜி.சுகுமாறன் நிறைவுரையாற்று கின்றார்.  புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திடுக, வருமானம் ஈட்டக்கூடிய பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைப்பதை தடுத்திடுக, என்டிஏ அலவன்ஸ் 43.600 என்ற  சீலிங்கை நீக்கிடுக, ஆக்ட் அப்ரெண்டீஸ் நியமனத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்து பயிற்சி முடித்த அனைவருக்கும் வேலை வழங்கிடுக. முடக்கப்பட்ட 18 மாத  டிஏ, டிஆர் அரியர்சை பெற்றிடுக, இபாஸ் முறையை மாற்றி மேனுவல் பாஸ் மீண்டும் பெற்றிடுக, ரயில்வே மருத்துவமனைகளை தரம் உயர்த்தி அனைத்து உயிர்காக்கும் மருந்துகளை தடையின்றி பெற்றிடுக, என்ஆர்பி 2030ஐ அமல்படுத்தி அனைவருக்கும் ஓய்வூதியத்தை முடக்கும் பேராபத்தை தடுத்திடுக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் எம்ஏசிபிக்கு வெரிகுட் வாங்க வேண்டும் என்ற அர்த்தமற்ற நிபந்தனையை நீக்கிடுக என்ற கோரிக்கைகளுடன் மாநாடு  நடைபெறவுள்ளது.