states

காவல் துணை ஆய்வாளர் உள்பட 3 பேர் பணியிட மாற்றம்

தூத்துக்குடி, ஜூன் 8- வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கு தொடர்பாக காவல் துணை ஆய்வாளர்  உள்பட 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் சேவியர் (54). கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி இவரை மணல் கடத்தல் கும்பல் அவர் பணியாற்றி வந்த வி.ஏ.ஓ. அலுவலகத்தில் வைத்து வெட்டிக்கொலை செய்தது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக கலியாவூரை சேர்ந்த ராமசுப்பு, மாரிமுத்து ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கிடையே இந்த வழக்கில் முறப்பநாடு காவல் நிலைய ஏட்டு சரவணன், எஸ்.பி. தனிப்பிரிவு காவலர் மகாலிங்கம், முறப்பநாட்டில் காவல் துணை ஆய்வாளராகபணியாற்றி தற்போது சாயர்புரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சுரேஷ் ஆகியோர் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் ஏட்டு சரவணன், தனிப்பிரிவு காவலர் மகாலிங்கம், துணை காவல் ஆய்வாளர் சுரேஷ் ஆகிய 3 பேரும் நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.