states

தீக்கதிர் விரைவு செய்திகள்

உ.பி. தொழிற்சாலையில் தீ: 8 தொழிலாளர்கள் பலி!

உத்தரப்பிரதேச மாநிலம், ஹபூர் என்ற இடத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் சனிக்கிழமையன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 8 தொழிலாளர்கள் சம்பவ  இடத்திலேயே பலியாகினர். 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்ததில் தீவிபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசா ரணையில் தெரிய வந்துள்ளது.

177 பண்டிட்டுகள் வேறு இடங்களுக்கு மாற்றம்!

ஜம்மு - காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள், பண்டிட்டுகளை இலக்குகளாக கொண்டு பயங்கரவாதிகள் படுகொலைகளை அரங்கேற்றி வருகின்றனர். இதனால், தங்களை பாது காப்பான வேறு இடங்களுக்கு மாற்றும்படி அரசு மற்றும் ஆசிரியர் பணியில் இருந்த பண்டிட்டுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை முன்னிட்டு 177 காஷ்மீரி பண்டிட் ஆசிரியர்களை பாதுகாப்பான வேறு இடங்களுக்கு மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்!

வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அடுத்த 2-3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு  வங்காளம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்; தென்  தீபகற்ப பகுதியில் ஜூன் 7 முதல் மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.

விரைவில் எலக்ட்ரிக் டிராக்டர், டிரக் அறிமுகம்!

மகாராஷ்டிராவின், புனே நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய சாலைப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எலக்ட்ரிக் கார், எலக்ட்ரிக் பேருந்து வந்து விட்ட நிலையில், விரைவில் எலக்ட்ரிக் டிராக்டர், டிரக் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மாற்று எரிபொருளாக மின்சாரமே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

குழந்தைகள் இறப்பில் ம.பி. மாநிலம் முதலிடம்!

இந்தியாவில், குழந்தை இறப்பு விகிதம், கடந்த 1971 ஆம் ஆண்டில் ஆயிரம் குழந்தை களுக்கு 129 என்று இருந்த நிலையில், 2020-இல் 28 குழந்தைகள் என்று நான்கில் ஒரு பங்காக குறைந்துள்ளது என்றாலும், இப்போதும் 36 குழந்தைகளில் 1 குழந்தை தமது அடுத்த பிறந்த நாளைக்கு முன்பே உயிரிழந்து விடுவதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. குழந்தை  இறப்பில் மத்தியப் பிரதேசம் (43) முதலிடத்திலும், மிசோரம் (3) கடைசி இடத்திலும் உள்ளன என்றும் ஆய்வு தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு கூட்டமைப்புக்கு இந்தியா போட்டி!

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் தகவல் சங்கத்தின் உலகளாவிய மாநாடு - 2022ல் மே 31 முதல் ஜூன் 3 வரை நடைபெற்றது. இதில் பேசிய ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை  இணையமைச்சர் தேவுசிங் சவுகான், “2023-26 காலகட்டத்திற்கான, ‘சர்வதேச தொலைத் தொடர்பு கவுன்சிலின்(ஐடியு) வானொலி ஒழுங்குமுறை வாரிய உறுப்பினர்’ பொறுப்புக்கு இந்தியா மீண்டும் போட்டியிடும். எம்.ரேவதி போட்டியிடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவைக்கு 41 பேர் போட்டியின்றி தேர்வு!

மாநிலங்களவைக்கு விரைவில் காலியாக உள்ள 57 இடங்களுக்கு ஜூன் 10-ஆம்  தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, வேட்பு மனுக்களை  திரும்ப பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்த நிலையில், 41 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக பாஜக-வுக்கு 14 இடங்கள் கிடைத்துள்ளன. காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 4 இடங்கள், திமுக, பிஜூ ஜனதாதளம் கட்சிகளுக்கு தலா 3 இடங்கள், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதாதளம், தெலுங்  கானா ராஷ்டிர சமிதி, அதிமுக கட்சிகளுக்கு தலா 2 எம்.பி.க்கள் கிடைத்துள்ளனர்.