states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தாயாருக்கு 100ஆவது  பிரதமர் மோடி பாத பூஜை!

பிரதமர் நரேந்திர மோடி, தனது தாயார் ஹீரா பென் 100-ஆவது  வயதில் அடியெடுத்து வைத்ததையொட்டி, சனிக்கிழமையன்று காந்தி நகரில் உள்ள இல்லத்திற்கு சென்றார். அங்கு தாயார் ஹீரா பென்னை நேரில் சந்தித்து அவருக்கு பாதபூஜை செய்தார். வாழ்த்துக்களைப் பெற்றார். இதனிடையே, குஜராத் தலைநகர் காந்தி நகரில் உள்ள 80 அடி சாலை ஒன்றுக்குப் ஹீரா பென்னிவின் பெயரை வைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

‘ஜவான், கிசான்’ இருவரையும்  அவமதிக்கும் மோடி அரசு!

“தொடர்ந்து 8 ஆண்டுகளாக ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ வீரர்களை ஒன்றிய அரசாங்கம் அவமதித்து வருகிறது.  வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெற வேண்டும் என்று நான் முன்பே கூறியிருந்தேன். எனவே, அதேபோல் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று அக்னிபாத் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் கருத்துக்கு  ஹேமந்த் சோரன் வரவேற்பு!

“ஒன்றிய - மாநிலக் கவுன்சில் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்த வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்துடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். கூட்டுறவுக் கூட்டாட்சி என்ற அவரது யோசனையை அனைத்து மாநில அரசுகளின் முழு ஒத்துழைப்போடு ஒன்றிய அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு - காஷ்மீருக்கு  எனது உதவி தேவைப்படுகிறது

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடுவதற்கு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மறுத்திருந்தார். அதைத்தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லாவும் மறுத்துள்ளார். “எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட நான் விரும்பவில்லை. ஜம்மு - காஷ்மீர் மிகவும் இக்கட்டான சூழலைக் கடந்து கொண்டிருக்கிறது. எனவே, இந்த நிச்சயமற்ற சூழலில், ஜம்மு - காஷ்மீருக்கு எனது உதவி தேவையென கருதுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

கோதுமைக்கு பண்டமாற்றாக  பாமாயில் இறக்குமதி?

இந்தோனேசியா நாட்டில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்து அதற்கு பதிலாக கோதுமையை ஏற்றுமதி செய்வதற்கான பண்டமாற்று பேச்சுவார்த்தையில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநாடுகளும் விரைவில் இதுகுறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்தியாவுக்கு இந்தோனேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படும் என்றும் இதன் காரணமாக மீண்டும் பழைய விலைக்கு சமையல் எண்ணெய் வரும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.