states

img

சிபிஎம் போராட்டத்தால் உதயமானது செங்கொடி நகர்

சிதம்பரம்,டிச.23- சிதம்பரம் அருகே கொத்தட்டை கிராமத்தில் இருளர் இன மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுக ளுக்கு முன்பு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது.  இந்த இடத்தை ஆக்கிரமித்த மாற்று சமூகத்தினர், இருளர் இன மக்கள் வீடுகட்ட அனுமதிக்கவில்லை. இதனால், வாய்க்கால் ஓரத்தில் குடிசை அமைத்துக்கொண்டனர். இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியினர், இருளர் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அவர்களுக்கே வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பிறகு, சாராட்சியர் மதுபாலன் வழங்கிய நிலத்திற்கு பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்த இடத்திற்கு செங்கொடி நகர் என பெயர் வைக்கப்பட்டது. அதற்கான பெயர் பலகை திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் விஜய் தலைமை தாங்கினார். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டு செங்கொடி நகர் பெயர் பலகையை திறந்து வைத்தார்.   இவருடன் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு,  மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. கற்பனைசெல்வம், ஜெயசீலன், பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆழ்வார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பரமானந்தம், கோபிநாத், லெனின், கிளைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.