கொச்சி, செப். 2- மாநிலத்தின் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களை விரைவில் நிறை வேற்ற ஒன்றிய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் விருப்பம் தெரிவித்தார். வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு உறுதியான ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது. இது மாநில நலன்களுக்கு ஏற்ப தொடர வேண்டும் என கேட்டுக்கொண்டார். கொச்சி மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், கேரளாவின் வளர்ச்சியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்றார். பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களும் வளர்ச்சியை துரிதப்படுத்தும். மாசு அளவைக் குறைக்கும் பொதுப் போக்குவரத்து அமைப்புகள் நாட்டிற்குத் தேவை. ஜலமெட்ரோ உள்ளிட்டவை தயாராகி வருகின்றன. மாநில அரசின் பங்களிப்புடன் தேசிய நெடுஞ்சாலை 66ஐ ஆறு வழிச்சாலையாக மேம்படுத்தும் திட்டம் விரைவாக முடிக்கப்பட்டு வருவதாக முதல்வர் கூறினார்.