கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காக கோவை-திருச்சூருக்கு 2.55 மணிநேரத்தில் 100 கி.மீ., சைக்கிளில் சென்று இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
கோவையை சேர்ந்த தொழிலதிபர் ஜி.டி.விஷ்ணுராம் மக்களின் நலன் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் கோவை-திருச்சூர் வரை 2.55 மணிநேரத்தில் 100 கி. மீட்டர் தூரம் வரை சென்று சாதனை படைத்துள்ளார்.
அதன்படி நேற்று பகல் 2.22 மணிக்கு கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி மற்றும் அறங்காவலர் ஆதித்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.
விஷ்ணுராம் மேற்கொண்ட சைக்கிளிங் பயணத்தை கோவையில் இருந்து 100 கி.மீ., 2.55 மணி நேரத்தில் திருச்சூரை சென்றடைந்தார். அவருடன் இண்டியா புக்ஆப் ரிகார்ட் நடுவர் ஹரிஷ் பின் தொடர்ந்து உறுதி செய்ததுடன், வரும் 2023 ஆம் ஆண்டில் வெளியாகும் இண்டியா புக்ஆப் ரிகார்ட்டில் பதிவு செய்வதற்காக சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். மேலும் இவருக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து விஷ்ணுராம் கூறுகையில், “மக்கள் ஒவ்வொருவரும் தற்போதைய நெருக்கடியான வாழ்வில் தங்கள் உடல் நலத்தை பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியமாகும். பாதிப்பு தனிப்பட்ட நபரை மட்டுமில்லாமல், குடும்பத்தையே பாதிக்கும். இதை தவிர்த்து ஒவ்வொருவரும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்த வேண்டும் என்ற லட்சிய நோக்கத்தில் விழிப்புணர்வு செய்து வருகிறேன்”. என்று தெரிவித்தார்.
முன்னதாக 2 முறை கார் மற்றும் சைக்கிளில் நீண்ட தூரம் குறுகிய நேரத்தில் பயணம் செய்து சாதனை புத்தங்களில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.