கேரளாவில் பொங்கல் விடுமுறையை ஜன.15 ஆம் தேதி என்று அறிவித்ததை மாற்றி நாளை(ஜன.14) விடுமுறை என கேரள அரசு அறிவித்தது.
கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் வாழும் 6 மாவட்டங்களில் 15 ஆம் தேதி விடுமுறையை மாற்றி அறிவிக்க முதல்வர் முக.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில், தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளத்தின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் நாளினை பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது. ஜனவரி 14 ஆம் தேதி புனிதமான தை தமிழ் மாதத்தின் முதல் நாளாகும்.
ஆனால் 2022 ஆம் ஆண்டில் 6 மாவட்டங்களில் ஜன.15 ஆம் தேதியினை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தமிழ் சமூகங்களிடையே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14 ஆம் தேதியான நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் கொல்லம், இடுக்கி, வயநாடு, பத்தம்திட்டா, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறையை 15 ஆம் தேதி என்று அறிவித்ததை மாற்றி நாளை விடுமுறை என கேரள அரசு அறிவித்தது.