கொச்சி, ஜன.30- மகாத்மா காந்தியை படுகொலை செய்த அதே வகுப்புவாத சித்தாந்தம் நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். முகநூலில் பகிர்ந்துள்ள குறிப்பில் பினராயி விஜயன் தெரிவித்துள்ள தாவது: மகாத்மா காந்தி வகுப்புவாத பயங்கரவாதத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட தினமான இன்று (ஜன.30). மதக் கலவரங்கள் மற்றும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக அமைதி மற்றும் மனிதநேயத்தைப் பாதுகாத்ததற்காக காந்தி தனது சொந்த வாழ்க்கையை விலை கொடுத்தார். இந்த தியாகத் திருநாளில், அந்த ஆழ்ந்த மனித நேயத்தின் எரியும் நினைவுகளால் நம் இதயங்கள் நிறைந்திருக்க வேண்டும். காந்திஜியின் நினைவுகள் முன்னெப்போதையும் விட மிகவும் பொருத்தமான ஒரு காலகட்டத்தை கடந்து செல்கின்றன.
மகாத்மா காந்தியை படுகொலை செய்த அதே வகுப்புவாத சித்தாந்தம் நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளத்தையே சீர்குலைக்கும் விதத்தில் எல்லாவிதமான மதவெறிகளும் களமிறங்குகின்றன. அப்பாவி மக்கள் பலியாகின்றனர். பேதங்கள் அனைத்தையும் தாண்டி மனித நேயத்தை அடிப்படையாக கொண்ட அன்பே மனிதனின் மிகப்பெரிய பலமாக கருதிய உலகம் போற்றும் மகாத்மா காந்தியின் நினைவு நாளில் வகுப்புவாதிகள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் காட்சிகளை கூட பார்க்கும் நிலையில் உள்ளோம்.
இது ஒரு சமூகமாக இந்தியர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். வலுவான அரசியல் நம்பிக்கையுடன் அந்த சவாலை நாம் ஏற்க வேண்டும். பல நூற்றாண்டுகளாக ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமைகளாக வாழ்ந்த மக்களை ஒன்றுதிரட்டி, தேசிய இயக்கத்துடன் இணைத்து, சுதந்திரம் அடைய வழிவகுத்த மகாத்மா காந்தியின் தியாகத்தின் நினைவே அதன் உத்வேகமாகவும் வலிமையாகவும் மாற வேண்டும். தேசிய இயக்கத்தை பிளவுபடுத்தி முடக்கும் வகுப்புவாதிகளின் முயற்சி வெற்றி பெற்றிருந்தால், இந்தியா மீண்டும் சுதந்திரம் அடைய நீண்ட காலம் எடுத்திருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மனித நேயத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநிறுத்த உறுதிமொழி ஏற்போம். மகாத்மா காந்தியின் நினைவாக வாழ்த்துகளை தெரிவிப்போம் என பினராயி விஜயன் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.