states

img

தொழில்துறைக்கு ஆதரவான சூழலை தடுப்போர் மீது கடும் நடவடிக்கை அமைச்சர் பி.ராஜீவ் எச்சரிக்கை

கொச்சி, ஜன.24- கேரளாவில் சாதகமான தொழில் சூழலுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் துறை அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்துள்ளார். கேரள அரசின் தொழில்துறை இயந்திர கண்காட்சியை (மெஷினரி எக்ஸ்போ- 2022) ஆன்லைனில் அவர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது: இன்னும் சில அதிகாரிகள் தங்கள் அணுகுமுறையையும் நடவடிக்கைகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். ஒவ்வொருவரும் மாற்றி சிந்திக்க வேண்டியது நாட்டின் தேவை. மேலும் பல முயற்சிகளை தொடங்கினால் மட்டுமே மாநிலத்திற்கு பலன் கிடைக்கும். மேலும் மாநிலத்திற்கு அதிக வருவாய் ஈட்டவும் இது உதவும். அரசு நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டுமானால் அதிக வருவாய் கிடைக்க வேண்டும். மேலும் பல தொழில்களை தொடங்க ஒன்றிய அரசு மற்றும் அனைத்து துறைகள், பொது மக்களின் ஆதரவு தேவை. இது தொடர்பாக பல்வேறு துறைகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. வங்கியாளர்களின் கூட்டமும் நடத்தப்பட்டது.

நடுத்தர மற்றும் குறுந்தொழில் தொடங்க மாநில அரசு சிறப்பான ஆதரவை வழங்கி வருகிறது. ஓராண்டுக்குள் ஒரு லட்சம் முயற்சிகளை இலக்காகக் கொண்டு அரசு முன்னேறி வருகிறது என்றார். தொழில் தொடங்க விரும்புவோருக்கும், நடத்தி வருவோருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி வழங்கப்பட வேண்டும். நமது நாட்டில் உள்ள தொழில்முனைவோருக்கு புதிய அறிவை அறிமுகப்படுத்தும் வகையில் இதுபோன்ற கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட்-அப்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தக் கண்காட்சியை கோவிட் நெறிமுறைகளை பின்பற்றி ஏற்பாடு செய்திருப்பதாக அவர் கூறினார். தொழில்முனைவோரின் நலனுக்காக பல்வேறு துறைகளில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

 இக்கண்காட்சியில் வேளாண் உணவு பதப்படுத்துதல், பொது பொறியியல் மற்றும் மின் மின்னணுவியல் துறைகளில் அதிநவீன இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. கண்காட்சியில் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட 140 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவுக்கு மேயர் எம்.அனில்குமார் தலைமை வகித்தார். எக்ஸ்போ டைரக்டரியை ஹைபி ஈடன் எம்.பி வெளியிட்டார்.  சிறப்பு விருந்தினராக டி.ஜே.வினோத் எம்.எல்.ஏ,, தொழில் துறை முதன்மைச் செயலாளர் ஹரிகிஷோர், கேஎஸ்ஐடிசி நிர்வாக இயக்குநர் எம்.ஜி.ராஜமாணிக்யம், மாவட்ட ஆட்சியர் ஜாபர் மாலிக், எம்எஸ்எம்இ இணை இயக்குநர் ஜி.எஸ்.பிரகாஷ், எப்ஐசிசிஐ இணைத் தலைவர் தீபக் அஸ்வானி, சிறுதொழில் சங்கத் தலைவர் எம்.எஸ். காலித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.