திருவனந்தபுரம், ஆக.9- கேரளத்தின் அதிகாரப்பூர்வ பெயரை ‘கேரளா’ என்பதில் இருந்து ‘கேரளம்’ என மாற்ற சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘கேரளம்’ என மாற்றம் செய்ய, ஒன்றிய அரசிடம், விதி 118-இன் கீழ் கோரும், முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார். உடனடியாக பெயர் திருத்த நடவடிக்கை எடுக்குமாறு பேரவை, ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டது. ‘‘நம் மாநிலத்தின் பெயர் மலையாள மொழியில் ‘கேரளம்’ என்பதாகும். மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது 1956 நவம்பர் 1 ஆம் தேதி. கேரளம் பிறந்தநாள் நவம்பர் 1ஆம் தேதி. மலையாளம் பேசும் சமூகத்தினருக்காக ஒன்றுபட்ட கேரளம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தேசிய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே வலுவாக எழுந்து வருகிறது. ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் முதல் அட்டவணையில் நமது மாநிலத்தின் பெயர் கேரளா என்று எழுதப்பட்டுள்ளது. அரசமைப்பின் 3ஆவது பிரிவின் கீழ் ‘கேரளம்’ என திருத்தம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசை இந்த பேரவை ஒருமனதாக கேட்டுக் கொள்கிறது. அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் நமது மாநிலத்தை ‘கேரளம்’ என மாற்ற வேண்டும் என்றும் இந்த அவை கேட்டுக்கொள்கிறது’’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.