கேரளாவில் 8 மாத குழந்தையின் சுவாசக்குழாயில் சிக்கிய ஊக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
திருச்சூர் மண்ணுத்தி பகுதியை சேர்ந்த வினோத்- தீபா தம்பதியின் 8 மாத ஆண் குழந்தை கடந்த 2 வாரங்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்தது. சிகிச்சைக்காக திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர்.
மருத்துவர்கள் குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளித்தும் குழந்தையின் உடல் நிலை முன்னேற்றம் அடையவில்லை. குழந்தைக்கு வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா என்பதை சோதிக்க ஸ்கேன் எடுத்தனர். அதில் சுவாசக் குழாயில் ஒரு ஊக்கு சிக்கி இருப்பது தெரியவந்தது.
பின்னர் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையின் சுவாசக் குழாயில் இருந்த ஊக்கை மருத்துவர்கள் அகற்றினர். சிகிச்சைக்கு பின்னர் குழந்தையின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்ததால் இன்று குழந்தையை பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.