கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் கருப்புக்கொடி காட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், டீ கடைக்கு வெளியே அமர்ந்து ஆளுநர் எதிர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கொட்டாரக்கரா சென்றுகொண்டிருந்தபோது, கொல்லம் அருகே உள்ள நில்லமேலியில் இந்திய மாணவர் சங்கத்தினர் கருப்புக்கொடி காட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காரில் இருந்து இறங்கிய ஆளுநர், சாலையோரம் போராட்டம் நடத்திய மாணவர்களை நோக்கி சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் அங்கிருந்த ஒரு டீ கடைக்கு வெளியே நாற்காலி போட்டு அமர்ந்து ஆளுநர் ஆரிப் முகமது கான் எதிர் போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்பு அவ்விடத்தை விட்டு ஆளுநர் கிளம்பினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.