states

img

மாதர் சங்க அகில இந்திய மாநாட்டில் 6 ஆவணங்கள்; அறிக்கைகள் மீதான விவாதம் நிறைவு

திருவனந்தபுரம் (எம்.சி.ஜோசபின் நகர்), ஜன. 8- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13ஆவது அகில இந்திய மாநாட்டில் ஆறு குழுக்களின் ஆவணங்கள் சனிக்கிழமையன்று சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றின் மீதான விவாதம் ஞாயிறன்று பிற்பகல் தொடங்கியது. அதோடு அமைப்பு மற்றும் செயற்பாட்டு, வரவு-செலவு அறிக்கைகள் மீதான விவாதம் ஞாயிறன்று நிறைவு பெற்றது. திங்களன்று தொகுப்புரை, நிர்வாகிகள் தேர்வு பேரணி-பொதுக்கூட்டத்துடன் மாநாடு நிறைவுப் பெற உள்ளது. நிறைவுப் பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகிறார். பிரதிநிதிகள் மாநாட்டில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் தேசிய, சர்வதேசிய விவகாரங்கள், போராட்டங்களும் தலையீடுகளும் குறித்து தீவிர விவாதங்கள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு பிரதிநிதிகள் ஜி.மஞ்சுளா, ஏ.ஆர்.ஆதிரா, டி.சுதா, ஆர்.கலைச்செல்வி மற்றும் புதுச்சேரி பிரதிநிதி இளவரசி உட்பட அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். நுண் நிதி நிறுவனங்களை முறைப்படுத்தக் கோரிய தீர்மானத்தை தமிழ்நாட்டின் வி.பிரமிளா முன்மொழிந்தார். 

தீர்மானங்கள்

சொத்துக்கள் மற்றும் இயற்கை வளங்களை பெருநிறுவனங்கள் கொள்ளையடிப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; ‘அறிவியல் உணர்வை வளர்த்துக் கொள்வது, மூடநம்பிக்கையை எதிர்த்துப் போராடுவது; ‘வேலை செய்வதற்கான உரிமையை உறுதி செய்தல், ஊரக வேலைத் திட்டத்தில் மேம்பாடு, நகர்ப்புற வேலை உறுதிச் சட்டத்தை அமல்படுத்துதல்; ‘நுண்கடன் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவது, பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன்களை உறுதி செய்வது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. போதைக்கு எதிரான போராட்டத்தில் இணைய மகளிர் அமைப்புகளுக்கு அழைப்பு, போதைப்பொருள் மாஃபியாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தியும், கூட்டாட்சி மீதான தாக்குதல்களை எதிர்த்து மாநில உரிமைகளைப் பாதுகாத்திடகோரியும், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோரியும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை விரைவுபடுத்தி தண்டனையிலிருந்து தளர்வு வழங்கி விடுவிக்க கோரியும், ‘கேரள மாதிரி வளர்ச்சி’ என்ற தலைப்பிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.