கேரளத்தில் பாலக்காடு அருகே உள்ளது தோனி யானைகள் காப்பகம். வனத்துறையினரால் இரண்டு மாதங்களுக்கு முன்பு மீட்கப்பட்ட யானைக்குட்டி இங்கு பராமரிக்கப்படுகிறது. இதன் வளர்ப்புத்தாயான சாந்திக்கு இந்த யானைக்குட்டி கண்மணி. ஆறுமாதக் கண்மணி பசித்து அழுதால், சாந்தி பாலுடன் அவளிடம் விரைவாள். அது பகலோ நள்ளிரவோ விடியலோ என்றில்லை. குழந்தை எழும்போதும் அழும்போதும் பாலூட்டுவதற்காகத் தொட்டிலின் அருகே அரைத் தூக்கத்தில் பொறுமையாகக் காத்திருக்கும் தாயின் அன்பும் பாசமும்தான் சாந்தியிடம் வெளிப்படுகிறது. சாந்தி எப்போதும் குட்டியானையின் கூண்டுக்கு அடுத்த படுக்கையிலும் அதைச் சுற்றியும் இருப்பார். சாந்தியை காணவில்லை என்றாலும் அழுவாள். கண்மணியே என்று அழைத்துக் கொண்டு ஓடிவந்து தழுவிக்கொள்வாள். அகளி குத்தானொடி வனப்பகுதியில் இறக்கும் தருவாயில் இருந்த குட்டி யானையை மீட்டு தோனியில் உள்ள வனத்துறை முகாமுக்கு கொண்டு வந்தனர் வனத்துறையினர் . முன்பு பி.டி-7 (PT-7) இருந்த கூண்டுதான் வாழிடம். வெளியே வந்தவுடன் விளையாட ஒரு மைதானம் உள்ளது. ஆனால், சாந்தி உடனிருக்க வேண்டும். தும்பிக்கையை சுருட்டியும் தரையில் படுத்து புரண்டும் விளையாடுகிறது. பசித்து அழும்போது லாக்டோஜன் கலந்த பால் கொடுக்கிறார் சாந்தி. ஒரு நேரத்தில் சுமார் இரண்டு லிட்டர் பால் குடிக்கிறாள் கண்மணி. ஒரு நாளைக்கு 20 லிட்டருக்கு மேல் பால் தேவைப்படுகிறது. இளநீர், தேங்காய் துருவல், கால்சியம், பாஸ்பரஸ் அடங்கிய சத்துக்களும் வழங்கப்படும். காலை ஒன்பது மணிக்கு குளிப்பதற்கு விட்டால் மதியம் 12 மணிக்குதான் திரும்பி வரும். மதியம் 3 மணிக்கு வெளியே விட்டு மாலை 5 மணிக்கு திருப்பி கொண்டு வருவார்கள். தொற்றுநோய் பயத்தில் கண்மணியின் அருகில் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
கூட்டத்தால் கைவிடப்பட்டது; வனத்துறை பாதுகாக்கிறது அக்.25ஆம் தேதி அகளி குத்தானொடி வனப்பகுதியில், தாயால் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது இந்த யானைக்குட்டி. தாயும் யானைக்கூட்டமும் அதே பகுதியில்தான் இருந்தன. ஐந்து நாட்கள் காத்திருப்புக்கு பிறகும் குட்டியை கூட்டத்துடன் சேர்க்கவில்லை. அக்டோபர் 31ஆம் தேதி இரவு தோனியில் உள்ள வனத்துறை முகாமுக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை தொடங்கியது. குட்டி யானை தோனி யானைகள் முகாமுக்கு வந்து இரண்டு மாதங்களை நெருங்கிவிட்டது. வன கால்நடை மருத்துவர் டேவிட் ஆபிரகாம் தலைமையிலான குழுவினர் உடல்நிலையை அவ்வப்போது பரிசோதித்து வருகின்றனர். புதிதாகப் பிறந்த யானைக்குட்டிக்கு அனைத்து பராமரிப்புகளும் உறுதி செய்யப்படுகின்றன. தொப்புள் கொடி பகுதி மற்றும் உடலில் இருந்த காயங்கள் ஆறியுள்ளன. வயிற்றுப்போக்கு இப்போது இல்லை. காட்டு யானைகள் குட்டிகளின் உடல்நிலை மோசமடைந்தால் அவற்றைக் கைவிடுகின்றன. தோனியில் உள்ள முகாமில் குட்டி யானை பராமரிக்கப்படுவது இதுவே முதல் முறை.
மகனைப் பார்க்க வந்தவருக்கு கிடைத்த மகள்
தோனியில் யானைப்பாகனாக பணியாற்றுபவர் மாதவன். இவரது தாய் சாந்தி. மகன் மாதவனை சந்திக்க தோனிக்கு வந்தார் சாந்தி. யானைக்குட்டி, தோனி முகாமுக்கு வந்ததும் அதன் வளர்ப்புத்தாய் ஆனார். பரம்பிக்குளம் ஆனைமலை புலிகள் சரணாலயம் கோழிக்கமர்த்தியில் பாரம்பரிய யானை வளர்ப்பு குடும்பத்தை சேர்ந்தவர் சாந்தி. இவரது கணவர் பழனிசாமி வனத்துறையில் மூத்த யானைப்பாகனாக உள்ளார். தோனி முகாமை பாதுகாக்க மகன் மாதவனும் அவரது நண்பர் மணிகண்டனும் முகாமில் உள்ளனர். பிரமுகா, அகஸ்தியர் போன்ற பிரபல கும்கி யானைகளும் இங்கு உள்ளன.