states

img

கேரளா ஸ்டோரி: உள்துறை அமைச்சருக்கு  சிபிஎம் எம்பி ஜான்  பிரிட்டாஸ் கடிதம்

கேரளா ஸ்டோரி திரைப்பட விவகாரத்தில் கடும்  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி ஜான் பிரிட்டாஸ் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்

கடந்த 3-ம் தேதி கேரளா ஸ்டோரி படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. சுமார் 1.19 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த டீசரில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் தன் கதையை பகிர்கிறார். அதில் 

புர்கா அணிந்த பெண் ஒருவர் தனது பெயர் ஷாலினி உன்னிகிருஷ்ணன் என்றும் தான் செவிலியராக விரும்புவதாகவும் கூறியுள்ளார்.  

மேலும், “இப்போது நான் பாத்திமா பா. ஆப்கானிஸ்தானில் உள்ள சிறையில் இருக்கும் ஐஎஸ் பயங்கரவாதி. என்னைப் போல் மதமாற்றம் செய்யப்பட்ட 32,000 பெண்கள் சிரியா மற்றும் ஏமன் பாலைவனங்களில் புதைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் டீசரில் கூறுகிறார்.

“கேரளாவில் சாதாரண பெண்களை மோசமான பயங்கரவாதிகளாக மாற்றும் கொடிய விளையாட்டு ஆடப்படுகிறது. அதுவும் வெளிப்படையாக,” என்று அவர் கூறுகிறார்.

இந்த டீசர் கடந்த ஆறு நாட்களில் யூட்யூபில் 440,000 பேருக்கும் மேலாகப் பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கேரளாவை சேர்ந்த பலரும் இதற்கு தடை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த நிலையில், தமிழக பத்திரிக்கையாளர் அரவிந்த்தாக்ஷன் இந்த திரைப்படத்திற்கு உரிய ஆதாரங்களைத் தயாரிப்பாளரும் இயக்குநரும் சமர்ப்பிக்க வலியுறுத்த வேண்டும் இல்லை என்றால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய தலைவர் பிரசோன் ஜோஷிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.  இதுகுறித்து அவர் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.

இதற்கிடையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு திருவனந்தபுரம் காவல்துறை ஆணையருக்கு கேரள காவல்துறை இயக்குநர் அனில் காந்த் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், கேரளாவில் 32,000 பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு மேற்கு ஆசியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறி படத்தைத் தயாரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதி உள்ளார்.