கேரளாவில் திருமண ஊர்வலத்தின்போது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தோட்டா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில், நேற்று திருமண விழா நடந்தது. திருமண விழாவையொட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த இசை நிகழ்ச்சியில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் திருமணச்சடங்கு முடிந்து புதுமணத் தம்பதிகளின் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது ஜிஷ்ணு என்பவரின் குழுவினர் ஊர்வலத்தில் வெடிகுண்டு வீசியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஜிஷ்ணுவின் தலையில் வெடிகுண்டு வெடித்து உயிரிழந்தார். மேலும் ஹேமந்த், அரவிந்த் ஆகியோர் காயமடைந்தனர்.
இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மற்றொரு வெடிகுண்டை கைப்பற்றியதுடன், காயம் அடைந்தோரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து வெடிகுண்டு வீச்சில் ஈடுபட்டோர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.